மாமன்னன் படம் பார்க்க நேரம் இல்லை; நம்பிக்கை தான் வாழ்க்கை - மனம் நொந்துபோன முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 

 

மதுரை மாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ள வார்டு பகுதிகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரை சந்தித்து மனு அளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, "மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகள் மன்னர்கால அகல்விளக்குகள் போல உள்ளது.  ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதை அதிகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இப்போது அதிமுக உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை அறை இருக்கை வழங்கவில்லை, டெல்லியில் மரியாதை இல்லை என முதலமைச்சர் பேசுகிறார். ஆனால் இவர்கள் இங்கு இருக்கை அளிப்பதில்லை. மாமன்னன் திரைப்படம் பார்க்கவில்லை, டைம் இல்லை உள்ளாட்சி தேர்தல் நடக்காதபோது கூட சிறப்பாக நிர்வாகம் இருந்தது.



 

மதுரை மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் கூட செயல்பட இயலவில்லை, நிதி இல்லை,  மதிமுக எம்.எல்.ஏ, துணை மேயரும் மாநகராட்சியை கண்டித்து பதவி விலகி போகிறேன் என்று பேசும் அளவிற்கு மாநகராட்சி செயல்பாடு உள்ளது. இது தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம். ஒன்றரை வருடமாக கோரிக்கை வைக்கிறோம் கண்டுகொள்வதே இல்லை. 10 ஆயிரம் கோடிக்கு அதிமுக ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்றினோம். ஆனால் இந்த 2 ஆண்டுகளில் எந்த பணிகளும் நடைபெறவில்லை. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை பாவம் எதோ வேறு துறை கொடுத்துட்டாங்கள் அவர காணோம். வணிகவரித்துறை அமைச்சர் தற்போது பவர்புல்லாக இருக்கிறார். இரு அமைச்சர்கள் இருந்தும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. தற்போது திமுக கூட்டங்களில் கூட அமைச்சர் பிடிஆரின் படங்களை கூட போடவில்லை. புதிய மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம், இப்போதாவது நடக்குமா என பார்ப்போம். நம்பிக்கைதான் வாழ்க்கை. வெற்றியை நோக்கி எடப்பாடி பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். தேர்தல் கூட்டணி என்பது இப்போது முடிவு செய்யமுடியாது, யாரும் முடிவு செய்யவில்லை, எந்த கூட்டணி என்றாலும் மாறும்  செந்தில்பாலாஜி குறித்து கம்யூனிஸ்ட், காங்கிரஸ் பேசவே இல்லை பாஜகவுடன் கூட்டணி குறித்து எடப்பாடி முடிவு செய்வார்” என்று கூறினார்.