தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடி நீராதாரமாக விளங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 70 அடியாக இருந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அணையின் பிரதான 7 மதகுகள் வழியாக உபரிநீராக  திறக்கப்பட்டு வருகிறது.




 

இதற்கிடையே தேனி மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு, மேகமலை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் வைகை ஆற்றில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  மேலும் வைகை அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்த நிலையில்,  அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 200 கன அடியாக இருந்தது.
   நேற்று இரவில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்த நிலையில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையின் 7 பிரதான மதகுகள், 7 சிறிய மதகுகள் என 14 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. 



 

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் அணையில் இருந்து மேலும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது. வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் வைகை ஆற்றில் சுமார் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.