மதுரை மாவட்டம் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பினர் ஆடிக்கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்த மற்றொரு தரப்பினர் நிகழ்ச்சியை பார்த்து அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குவாதமானது த இருதரப்பு மோதலாக மாறிய நிலையில் அந்தப் பகுதி முழுவதும் களேபரம் போல மாறியது.  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் நொண்டிகோவில் தெரு பகுதிக்குள் புகுந்த சிலர் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை உடைக்க தொடங்கினர்.



 

மேலும், வீட்டில் உள்ள நபர்களை அடித்து காயம் ஏற்படுத்தினர் இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று கலவரத்தை தடுத்து நிறுத்தினர். இந்த இரு தரப்பு மோதலில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36பைக்குகள்1 கார் ஆகியவை சேதப்படுத்தப்பட்டது மேலும் அதே பகுதியை சேர்ந்த  மணிமுத்து, செந்தில்குமார், முத்துகுமார், பழனிகுமார் ஆகிய 4 பேருக்கு காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருதரப்பு மோதலால் திருமோகூர் பகுதியில் பதட்டமான சூழல் உருவாகுவதால் தற்பொழுது அந்த பகுதி முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் பைக்குகள் கார் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரை கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் போல காட்சியளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



 

இந்நிலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்து பொமக்கள் மீது தாக்குதல் நடத்தி, வாகனங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க.,வினர் சார்பாக ஒத்தக்கடை பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.