திராவிட மாடல் என்று அழைக்கப்படும் சூழலில் மாடல் என்ற ஆங்கில சொல்லுக்கு பதிலாக தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 


ஆங்கிலத்தில் மட்டும் பெயர் வைத்துள்ள தனியார் நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.


இதுகுறித்து, அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


வழக்கு:


தமிழக அரசாணையின்படி தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்னும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை மனு  தாக்கல் செய்திருந்தார். 


அரசாணை:


தமிழ்நாடு அரசாணையின்படி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகையை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.


அதில், "தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார்  கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில்  தமிழக அரசின் 1982 ம் ஆண்டு அரசாணை படி தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.


ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும், தூய தமிழில் பெயர் பலகை எழுத வேண்டும் என்ற அரசாணையை அமல்படுத்த வில்லை. எனவே உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறை படுத்தாத தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டு துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அரசு தரப்பு:


அப்போது அரசு தரப்பில், அரசு அலுவலகங்களில் தொடர்புடைய அலுவலகங்களின் பெயர் பலகை தமிழக அரசின் அரசாணை படி உரிய முறையில் கடைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.


ஆனால் தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழக அரசின் அரசாணை படி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என தெரிவிக்கப்பட்டது.


திராவிட மாடல்:


இதனை அடுத்து நீதிபதிகள், தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் உண்மையிலேயே கடுமையாக பாடுபட வேண்டும். சட்டக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் பாட புத்தகங்கள் தமிழில் வழங்க வேண்டும். மேலும், வழக்கு தொடர்பான குறிப்பு எடுக்கபடும் சட்ட புத்தகங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும்.


தற்போது திராவிட மாடல் என கூறப்படுகிறது. அந்த திராவிட மாடலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் சொல் என்ன? ஏன் ஆங்கிலத்தில் பயன்படுத்துகிறார்கள்? முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்


தமிழக அரசாணையின்படி தமிழ்,  ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகையை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்‌.