திருநெல்வேலியை சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் அறங்காவலர் நியமனத்திற்கு  விண்ணப்பிக்கும்  நபரிடம், அந்த விண்ணப்பத்தோடு அவரின் சொத்து  விபரங்கள், வழக்கு விபரங்கள் குறித்த பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் அறங்காவலர் நியமனத்திற்கு  விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மற்றும் பிரமாண பத்திரங்களை சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலைத்துறை ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிடவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

 



 




 


இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா,  வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்  தரப்பில், "அறங்காவலர்களுக்கு யார்? யார்? விண்ணப்பித்து உள்ளனர் என தெரிய வேண்டும். வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்" என வாதிடப்பட்டது. அரசுத்தரப்பில்,  அறங்காவலர்களுக்கு ஊதியம் ஏதும் வழங்கப்படாத நிலையில், இது போன்ற விதிமுறைகளால் யாரும் விண்ணப்பிக்க முன் வர மாட்டார்கள்.  தேர்தலில் பிராமண பத்திரம் தாக்கல் செய்வது போல், இதற்கு தேவையில்லை" என வாதிடப்பட்டது. மேலும், "மனுதாரர் கோரிக்கையின்படி அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் அனைத்து தகவலும் இடம்பெறும் வகையில் விண்ணப்ப மனு வெளியிடப்பட்டுள்ளது என கூறி அதனையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர் அரசியல் கட்சியை சேர்ந்தவரா? வீடு உள்ளதா? இது போன்ற விவரங்களை ஏன் விண்ணப்பதாரரிடம் கேட்க வேண்டும். அறங்காவலர்கள் பொறுப்பேற்றவுடன் இது போன்ற கோரிக்கைகளை முன் வைக்கலாம்.  ஆனால் தற்போதே ஏன் பிரமான பத்திரம் வழங்க வேண்டும் என கோருகிறீர்கள்? மேலும் விண்ணப்பத்திலேயே தேவையான விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன என கருத்து தெரிவித்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தனர்.  இந்நிலையில் இன்று நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.