சிவகங்கையில் பழங்கால கழிவு நீர்க் குழாய் கண்டுபிடிப்பு - தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

சிந்து சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது. என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க் குழாய்கள் காணக் கிடைக்கின்றன.

Continues below advertisement

சிவகங்கை மாவட்டத்தில் கீழடியைப் போல் பல இடங்களில் பழமையான  தொல்லெச்சங்கள் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. தற்பொழுது சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், பனங்குடிப் பகுதியில் பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு என்னும் இடத்தில் வித்தியாசமான அமைப்பில் ஓடுகள் கிடைப்பதாக பனங்குடியைச் சேர்ந்த சசிக்குமார், பாண்டியன் இளங்கோ, முத்தரசு ஆகியோர்  சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன் துணைச்செயலர் முத்துக்குமார், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் அப்பகுதியில்  மேற்பரப்புக்கள ஆய்வு செய்தனர். 

Continues below advertisement


கழிவுநீர்க்குழாய்:

இதுகுறித்து புலவர் கா.காளிராசா  செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது,”பனங்குடிக் கண்மாய் மயிலாடும்போக்கு பகுதியில் கண்மாய் கரையை அகலப்படுத்துதல் மற்றும் உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்பணியின் பின்பு அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள் விளையாடும் பொழுது வித்தியாசமான மண் ஓடுகள் கிடைத்திருக்கின்றன. அவற்றை அவர்கள் பெரியவர்களிடம் காண்பித்துள்ளனர், அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஊர்க்காரர்கள் இது ஏதாவது பழமையான ஓடாக இருக்கும் என்ற அளவில் விட்டுவிட்டனர்.

இந்நிலையில் நாங்கள் அவ்விடத்தில் மேற்பரப்பு கள ஆய்வில் ஈடுபட்டோம், இங்கு காணப்பட்ட கழிவுநீர்க் கால்வாய் போன்ற அமைப்பு மண்ணால் உறை போன்று செய்யப்பட்டு ஒன்றின் மேல்  ஒன்றாக  கோர்வையாக அடுக்கி படுக்கை வசத்தில் நீர் போவதற்கான அமைப்பாக ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளது. இதுபோன்ற கழிவு நீர்க் குழாய் அமைப்புகள் சிந்துச் சமவெளி நாகரிகம் தொட்டு காணப்படுகிறது. என்றாலும் தமிழகத்திலும் கீழடி போன்ற அகழாய்வுகளில் இவ்வாறான கழிவு நீர்க் குழாய்கள் காணக் கிடைக்கின்றன.


கீழடியினும் வேறுபட்ட கழிவு நீர்க்குழாய்கள்.

கீழடியில் காணப்பட்ட கழிவுநீர்க்குழாய்களை விட  இவை அளவில் சற்று பெரியதாக இருக்கிறது. இதன் அமைப்பு முறையும் கீழடி அகழாய்வில் கிடைத்த குழாயினும்  மாறுபட்டதாகவே  தெரிகிறது.

பரந்து விரிந்து கிடக்கும் பானையோடுகள்.

பனங்குடி மயிலாடும் போக்கு கண்மாயை அடுத்து சுமார் 15 ஏக்கருக்கு பானை ஓடுகள் பரந்து விரவிக் கிடக்கின்றன. இதில் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மேலும் வட்டச்சில் எச்சங்களை  கண்டெடுத்தோம்‌.


வாழ்விடப் பகுதியை ஒட்டியே இடுகாட்டுப் பகுதி.

பரந்து விரிந்து கிடக்கிற பானை ஓடுகளைக் கொண்டும் குழாய் வடிவத்தில் கிடைக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் பிற தேவைக்காக பயன்படுத்தப்பட்ட குழாய் அமைப்பைக் கொண்டும் இது வாழ்விடப் பகுதி என்பதை நாம் அறிய முடிகிறது. மேலும் இப்பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் பெருங்கற்கால கல்வட்ட எச்சங்களையும் காண முடிகிறது‌.  அந்த கல் வட்ட எச்சங்களுக்கிடையே முதுமக்கள் தாழி பானை ஓடுகளும் மேற்பரப்பில் காணக் கிடைக்கின்றன.


தொல்லியல் துறையினர் ஆய்வு

இவ்விடத்தில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வை மேற்கொண்ட பிறகே முழுமையான தகவல் தெரியவரும், இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் நாம் பேசிய பொழுது மாவட்ட நிர்வாகம் வழியாக தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக் கூறினார். இது குறித்து கிராம மக்களிடையே  தொன்மையை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தோம் என்றார்.

 

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு

Continues below advertisement