கொடைக்கானல் வருவோருக்கு எச்சரிக்கை... வாகனங்களில் நெகிழி பயன்படுத்தினால் பெர்மிட் ரத்து
நெகிழிகள், 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் மலைப்பகுதியில் உபயோகப்படுத்தினால் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு. 86-ன் கீழ் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து.
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி மற்றும் ஐந்து லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் வாகனங்களில் கொண்டு செல்லவும், உபயோகிப்பதற்கும் தடை விதித்துள்ள நிலையில், இதனை மீறி வாட்டர் பாட்டில்கள், நெகிழி கொண்டு செல்லும் வாகனங்களின் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து செய்யப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
Just In
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.
இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்களில் அதிகளவில் நெகிழி பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே கொடைக்கானல் நிர்வாகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் பயன்படுத்துவது குறிப்பாக கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, கொடைக்கானல் பகுதிகளில் சென்னை உயர்நீதி மன்றம் 5 லிட்டருக்கு குறைவான அனைத்து நெகிழி, தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்கள் வைத்து இருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வரி விதிக்கப்படும் என்று கொடைக்கானல் ஒன்றியத்திலுள்ள 15 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விதிகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக உள்ள காமக்கப்பட்டி, பழனி நுழைவு வாயில் பகுதியாக உள்ள அய்யம்புளி சோதனச்சாவடி, சித்தரேவு உள்ளிட்ட 5 பகுதிகளில் பிளாஸ்டிக் பரிசோதனை செய்வதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் நெகிழி வைத்திருக்கும் நபர்களுக்கு பசுமை வரியும் விதிக்கப்பட்டு உள்ளது, இந்நிலையில் இன்று முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிகள், 5 லிட்டருக்கு குறைவான வாட்டர் பாட்டில்கள் மலைப்பகுதியில் உபயோகப்படுத்தினாலோ வாகனங்களில் கொண்டு சென்றாலோ மோட்டார் வாகன சட்டம் 1988-ன் பிரிவு. 86-ன் கீழ் அனுமதி சீட்டு(வாகன பெர்மிட்) ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சிதலைவர் சரவணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.