கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை இன்று முதல் தொடங்கியது. இ-பாஸ் பெற்ற சுற்றுலாப் பயணிகள் மட்டும் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.


சென்னை மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும்  வெயிலின் தாக்குதல் கொடூரமாக இருந்து வருகிறது. இது மே மாதம் என்பதால் பெரும்பாலான குழந்தைகளுக்கு இது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோடை விடுமுறையை அனுபவிக்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கவும் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவது இயல்பான ஒன்றே. அந்த வகையில் தற்போது சுற்றுலா தலங்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர்.




கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைவாசஸ்தலங்களில் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்து செல்வதால் இந்த மலை நகரங்களில் வாகன நெரிசல் பல மணி நேரம் ஏற்பட்டு சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் அவதி அடைந்து வந்தனர். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானலில் உள்ள பொதுமக்களும் அதே போல ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் ஊட்டியில் உள்ள பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.




இதை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டது. இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் இன்று முதல் இ.பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இபாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்ல முடியும். இதன் அடிப்படையில் கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை தொடங்கியது. இ பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் சோதனை செய்யப்பட்டு கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.




கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் பணியாளர்கள் இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்களை கொடைக்கானலுக்கு அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் பல சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு  வலைதளத்தில் முயன்று வருவதால் இ-பாஸ் வலைதளம் முடங்கி வருகிறது. இதே போல உள்ளூர் வாகன உரிமைதாரர்களின் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இவற்றை சீர் செய்து விண்ணப்பிக்கும் அனைவருக்கும் உரிய இ-பாஸ் கிடைப்பதற்கு உரிய நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகளும் கொடைக்கானல் வாழ் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.