மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.



ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தனர். இந்தநிலையில் நேற்று மற்றும் இன்றும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். ஒரேநேரத்தில் கார், வேன், பேருந்து என வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



இருப்பினும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இதற்கிடையே கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள், மோயர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களையும், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்காவிலும் குவிந்தனர். சுற்றுலா இடங்களில் நிலவிய இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இதுதவிர கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோழா அருவி, தேவதை அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதனை பார்த்து குதூகலித்த சுற்றுலா பயணிகள், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களில் புகைப்படம் எடுத்த மகிழ்ந்தனர்.



மலைப்பகுதிகளில் தற்போது அவ்வப்போது லேசான சாரல் மழையுடன் கூடிய கடும் குளிர் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியும், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அந்த அருவிகளின் எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதேபோல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில், படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.