குடி போதையில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி - கொடைக்கானலில் கேரள இளைஞரின் அலப்பறை

மகப்பேறு மருத்துவமனை அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அதிக போதையில் வந்த கேரள வாலிபர் கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோன்று கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் இருந்து நான்கு வாலிபர்கள் கொடைக்கானலில் உள்ள இயற்கை காட்சிகளை காண்பதற்காகவும், குளுகுளு காலநிலையை, அனுபவிப்பதற்காகவும் கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்காக வந்துள்ளனர்.


சுற்றுலாவுக்காக வந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சையது அலி மகன் நாஜி (23) கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் பகுதியில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். இரண்டு நாள் சுற்றுலாவிற்கு பிறகு  மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கு புறப்பட்டு கொண்டு இருந்த அவர்கள் அதிக அளவில் மது போதை உட்கொண்டதாக கூறப்படுகிறது. போதையில் இருந்த நண்பர்களுடன் புறப்பட்ட நாஜி போதையின் உச்சத்தில் செய்வதறியாமல் பதற்றத்தில் பல்வேறு காரியங்கள் செய்துள்ளார்.


அப்போது காயம் அடைந்த நாஜியை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு நண்பர்கள் சிகிச்சைக்காக கொண்டு வந்த போது பதற்றத்தில் காரை விட்டு திடீரென இறங்கியவர் மகப்பேறு மருத்துவமனை அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து அந்த கண்ணாடியை எடுத்து தன்னுடைய கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். திடீரென்று கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட நண்பனால் பதற்றத்தில் இருந்த நண்பர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு போய் சேர்த்தனர்.


முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கழுத்தை அறுத்துக் கொள்ளும் காட்சியை பல தரப்பினர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ செய்ததால் கொடைக்கானல் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்

Continues below advertisement