அரசு பேருந்துக்கு வழி விடாமல் இரண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேரை ஓரமாக செல்லுங்கள் என்று கூறிய அரசு பேருந்து டிரைவருக்கு தர்ம அடி விழுந்தது. இதனால், பேருந்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பழனியை நோக்கி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி அளவில் அரசு பேருந்து கிளம்பியது. பஸ்ஸை கார்த்திகேயன் (46) ஓட்டிச் சென்றார். கன்டக்டராக வேடசந்தூரை சேர்ந்த செபஸ்தியார் (45) இருந்துள்ளார். பஸ்ஸில் 50 பயணிகள் சென்றுள்ளனர். பஸ் சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஐந்து நபர்கள் பஸ்ஸுக்கு வழி விடாமல் நடுரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.




இதனையடுத்து டிரைவர் தொடர்ந்து ஹாரன் அடித்துக் கொண்டே அவர்களை முந்தி சென்றார். அவர்களை முந்திசெல்லும் பொழுது ஓரமா போக முடியாதா என்று கூறிவிட்டு சென்று விட்டார். பஸ் சேனன்கோட்டையில் பயணிகளை இறக்குவதற்காக நின்றது. அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேரும் இறங்கி பஸ்ஸில் ஏறி கதவை திறந்து டிரைவரை கீழே இழுத்து போட்டு சரமாரியாக அடித்தனர். ஐந்து பேர் அடித்ததால் டிரைவர் படுகாயம் அடைந்தார்.




டிரைவரை தாக்குவதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் தாக்கியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் ஒருவர் மட்டுமே தப்பி ஓடிய நிலையில் பெண் உட்பட நான்கு பேர் பொதுமக்களிடம் சிக்கினார். சிக்கியவர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது வேடசந்தூரில் இருந்து சேனன்கோட்டை வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களும் அதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து வேடசந்தூருக்கு வந்த அரசு பஸ் டிரைவர்களும் பஸ்ஸை நிறுத்திவிட்டு எங்களுக்கு பாதுகாப்பில்லை நியாயம் கிடைக்கும் வரை பஸ்சை எடுக்க மாட்டோம் என்று நிறுத்தினர். இதனிடையே படுகாயம் அடைந்த டிரைவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.




இச்சம்பவத்தால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் பொதுமக்களின் தாக்குதலில் இருந்து நான்கு பேரை மீட்டு அழைத்து சென்றார். போலீஸ் விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காளணம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (48) பூத்தாம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (39) மாரியம்மாள் (36) சந்தோஷ்குமார் (19) என்பது தெரியவந்தது தப்பி ஓடிய நபர் காளணம் பட்டியை சேர்ந்த நடராஜ் வயது 40 என்பது தெரிய வந்தது.


ஓரமாக செல்லுங்கள் என்று கூறிய டிரைவரை கீழே இழுத்துப் போட்டு தாக்கிய சம்பவத்தால் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் அச்சமடைந்துள்ளதுடன் இதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.