திண்டுக்கல் மாவட்டம்  முத்தனம்பட்டி  பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியின் தாளாளராக இருந்து வருபவர் ஜோதிமுருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த மாணவி சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து வந்த நிலையில்,  மாணவிகள் சார்பில் தாளாளர் ஜோதிமுருகனை கண்டித்து  போராட்டம் நடந்தது. இதையடுத்து 3 மாணவிகள் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் ஜோதிமுருகன் மீதும் மேலும் விடுதி வார்டன் ஆகியோர் மீதும் புகார் கொடுத்தனர்.




அதன்பேரில் தாளாளர் ஜோதிமுருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறிய விடுதி வார்டன் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர் . ஆனால் தாளாளர் கைது செய்வதற்கு தப்பி ஓடினார். நீண்ட நாட்களாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில், ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் ஜோதிமுருகன் நிபந்தனை ஜாமீன் பெற்றார். இதை அறிந்த மகளிர் அமைப்புகள் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் நடத்தினர். அதேநேரம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலீசார் மற்றும் அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜோதி முருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு குறிப்பிட்ட நாட்களில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.




இதனை எதிர்த்து ஜோதிமுருகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அதே தீர்ப்பையே மீண்டும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். இந்த நிலையில் பாலியல் புகார் ரீதியாக சிக்கிய ஜோதிமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியர் விசாகனுக்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் பரிந்துரை செய்தார் . அதன்படி ஜோதிமுருகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து ஜோதி முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண