திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமம் தோட்டத்து குடியிருப்பில் வசித்து வருகின்ற மாரிமுத்து-கஸ்தூரி தம்பதியின் 10-வயது சிறுவன் முகேஷ்(10) அதே பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்து கடுமையான வயிற்றுவலியால் துடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகிலுள்ள பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.




ஆனால், மேலும் சிறுவனின் உடல்நிலை முன்னேற்றமடையாததால், மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என சில மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நிலங்களை விற்று கடந்த 15 தினங்களுக்கு முன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் 6-7 இலட்ச ரூபாய் வரை செலவு செய்து நவீன பரிசோதனை செய்ததில் அச்சிறுவனுக்கு "வில்சன் காப்பர் என்னும் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று பல கட்ட சிகிச்சையளித்ததாக கூறப்படுகிறது,


தொடர் சிகிச்சையின் போதே மாணவனின் உடல்நிலை தொடர்ந்து மேலும் மோசம் அடைந்ததை அடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் இச்சிறுவனுக்கு இலட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய (வில்சன் காஃபர்) என்னும் மர்மநோயால் பாதிக்கப்பட்டுள்ளர். இதனால் உடனடியா கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும், இல்லை என்றால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் அதனால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லுங்கள் எனக் கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.


அந்த ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடலாம் என புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். அங்கும் அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த மர்ம நோயிக்கான மருத்துவ சிகிச்சை இங்கு இல்லை அதனால் நீங்கள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லுங்கள் எனக் கூறி அவர்களும் அனுப்பி வைத்துவிட்டனர். செய்வதறியாது தவித்த அந்த ஏழை கூலி தொழிலாளி தம்பதியினர். ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கியும் எந்த மருத்துவரும் சரியான பதிலை சொல்லாதால் கதறி அழுது கொண்டு வேறுவழியின்றி என்ன செய்வதென்று புரியாமல் தற்போது தங்களது சொந்த ஊருக்கே மகனை அழைத்து வந்து விட்டனர்.




இந்நிலையில் அச்சிறுவனின் பெற்றோர்கள் கூறும் பொழுது,  “ஐந்தாம் வகுப்பு படிக்கும் தங்களது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு பழனி, திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி என பல்வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், மகனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்ததால் தற்போது வீட்டிற்கு வந்துவிட்டோம். அவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் வீட்டிற்கு வந்துள்ளோம். எனவே தமிழக முதல்வரும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும் சிறப்பு கவனம் செலுத்தி, தனது மகனை எப்படியாவது காப்பாற்றி கொடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு என்ன நோய் என்று இதுவரை தெரியவில்லை என்றும் ஒவ்வொரு மருத்துவர்கள் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர் எனவும், தமிழக முதல்வர் தலையிட்டு எனது மகன் உயிருடன் வாழ, உயர் சிகிச்சையளித்து மீண்டும் நல்லபடியாக எங்களிடம் ஒப்படைக்க உதவ வேண்டும் எனவும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண