மதுரை மாநகர் கலைநகரிலுள்ள பல்லவி நகரைச் சேர்ந்தவர் கோபிலால். இவர்  மதுரை ஆனையூர் பகுதியிலுள்ள  சையது அபுதாகீர் என்பவரிடம் கடந்த 1990ல்  ஓர் காலியிடத்தை  வாங்கி, அதில் வீடு கட்டி  அனுபவித்து வருகிறார். ஏற்கனவே இவ்விடம் பேட்டைக்காரன் என்ற ராமன்  என்பவரின் பெயரில்  பட்டா பெற்று ராமன் வேறு நபருக்கு விற்றுள்ளார். 

 

பட்டாமாற்றம்:

 

இந்நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடம் ஆ.கோசாகுளத்தைச் சேர்ந்த  ராமன் என்பவரின்  மகன் ராஜா செல்வராஜ் பெயருக்கு பட்டா மாற்றியது தெரிந்தது.  இது தொடர்பாக  மதுரை  மாநகர நில அபகரிப்பு பிரிவில்  கோபிலால் கடந்த 2021 மார்ச் மாதம் புகார் அளித்தார்.



 

துணை வட்டாட்சியர்:

 

அதன்பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,  கோபிலால் வாங்குவதற்கு முன், அவ்விடம்  ராமன் என்பவர் பெயரில் இருந்த நிலையில், ராஜா செல்வராஜ் தனது தந்தையின் பெயர் ராமன் என்ற ஒற்றுமையை பயன்படுத்தி அந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா பெற்றுள்ளார். மேலும், இதற்கான பட்டா மாறுதலை  கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி ஆய்வு செய்து, அப்போதைய  துணை வட்டாட்சியராக இருந்த  மீனாட்சிசுந்தரம் பட்டா  வழங்கியது தெரியவந்துள்ளது.

 

இதைத்தொடர்ந்து  ராஜாசெல்வராஜ்,  மீனாட்சி சுந்தரம் (தற்போது மதுரை மேற்கு தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர்) ஆகியோர் மீது   நில அபகரிப்பு பிரிவு  காவல்துறையினர் முறைகேடு வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, மீனாட்சிசுந்தரம் முயற்சித்த நிலையில், அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் தலைமறைவாக இருந்த மீனாட்சி சுந்தரத்தை காவல்துறையினர்  தேடவந்த நிலையில்  மதுரை கடச்சனேந்தல் பகுதியில் வைத்து நில அபகரிப்பு பிரிவு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரத்தை கைது செய்தனர்.