செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையில் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்றும்,மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்க வேண்டும், கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேநீர் கப்புகள், டயர்கள், விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடன் அப்புறப்படுத்த வேண்டும். நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்பு குழு அமைத்து SOP முறை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும், சுத்தமான குடிநீர் வசதியினை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். கல்லூரி துவங்குவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே கல்லூரி வளாகத்தினை சுத்தம் செய்திட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவுகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு ஏற்கெனவே பொதுவான நெறிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.



இந்நிலையில் அனைத்து மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும், கல்வி நிறுவனங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும், கூடுதல் கல்விக்கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், விடுதிகளை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர்  இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியபடியும், தமிழக அரசை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். சமூக இடைவெளியை பின்பற்றி இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனையடுத்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.