அருப்புக்கோட்டை நகர காவல்துறையின் விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கப்பாண்டியின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில், தங்கப்பாண்டியின் உறவினர்கள் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்யலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த தங்கமாரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது இளைய மகன் தங்கப்பாண்டிக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 13ஆம் தேதி அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் எனது மகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


மறுநாள் செப்டம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் போனில் எங்கள் தொடர்பு கொண்ட காவல் துறையினர், விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தனர். அங்கு சென்றபோது எனது மகன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 17ஆம் தேதி எனது மகனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில்,  11 இடங்களில் காயம் இருந்ததாகவும், அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அந்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. காவல்துறையினர் காவலில் வைத்து தாக்கியதன் காரணமாகவே, எனது மகன் உயிர் இழந்துள்ளார். ஆகவே சட்டவிரோத காவலில் உயிரிழந்த எனது மகனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி சுகுமார குரூப் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. என தெரிவிக்கப்பட்டது.


இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, "உறவினர்கள் உடலை 2 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும். தவறினால், 
காவல்துறையினரே உரிமை கோரப்படாத உடல்களை அடக்கம் செய்வது போன்று அடக்கம் செய்யலாம்" என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.


 




மற்றொரு வழக்கு


தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கு.


தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து  வருகிறது அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார். அரசு தரப்பின் பதிலை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்  வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


 


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த கலந்தார் ஆஷிக் அகமது உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் புற நோயாளிகளாகவும் , உள்நோயாளிகளாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும், தொண்டியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட  மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் அனைவரும் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையை சார்ந்து உள்ளனர். இது மட்டுமில்லாமல் கிழக்கு கடற்கரை சாலைக்கு அருகே  இந்த மருத்துவமனை உள்ளதால் கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் அதிக விபத்துகளில் பாதிக்கப்படுவோர் இங்கு வைத்து தான் முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். உயரிய மருத்துவ வசதி இல்லாததால் முதலுதவி சிகிச்சை முடித்து அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் பலர் கொண்டு செல்லும் வழியில் உயிர் இழப்பு ஏற்பட்டு விடுகிறது.


இதனை கருத்தில் கொண்டு தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிராசத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது மேலும் இது அரசின் கொள்கை ரீதியான முடிவுக்கு உட்பட்டது தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இந்த வழக்கினை
முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.