மதுரையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 25 இலட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளி கட்டடத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






பின்னர் மதுரை மகபூப் பாளையம் பகுதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்தில் நிதியமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது, "இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களிடம் அரசு நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன்படி 133 நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தது அவற்றின் 25 நிறுவனங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.  புதிய கண்டுபிடிப்புகளையும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக நிறுவனத்தின் கொள்முதல் திட்டம் தொடங்கப்பட உள்ளது.





குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நகை கடன் தள்ளுபடி, 4 ஆயிரம் ரூபாய் கடன் நிவாரண உதவி வழங்கியது போன்று தகுதியுடைய நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் ஊக்க தொகை  வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்" எனவும் நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.