விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

மதுரை மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள மருந்து நிறுவனம், கடை, மற்றும் பார்சல் சேவை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், விற்பனையை தடுக்கும் நோக்கிலும் அனைத்து மருந்துக் கடைகள் மற்றும் பார்சல் சேவை நிறுவனத்திற்கு காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் மற்றும் அரசு மருத்துவமனை நிபுணர், துணை ஆணையர்கள்,மற்றும் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி

 

நிகழ்ச்சியில் பேசிய மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன்..,” மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் கூல் லிப் பயன்படுத்துகிறார்கள்., மதுரையில் கடந்த 8 மாதத்தில் 13ஆயிரம் கடைகளில் 1700 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 420 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை  விற்பனை செய்த கடைகளுக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் கூல் லிப் பயன்படுத்துகிறார்கள். மாணவர்கள் பள்ளி வகுப்புகளிலேயே போதையில் அமர்ந்துள்ளனர். இது போன்ற மாணவர்கள் வரும் காலத்தில் கஞ்சா பயன்படுத்துவார்கள், பின்னர் கொலையும் செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள் என்றார்.

 

மதுரை போலீஸ் கமிஷனர்

 

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய  மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேசியபோது, ”மாநகர காவல்துறையும் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையும் இணைந்து மதுரையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளில் 2068 வழக்குகள் பதிவு செய்து, 2174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்களை அதிரடியாக தொடர்ந்து கைது செய்து வருகிறோம். 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை  2068 வழக்குகள் பதிவுசெய்து குட்கா பொருட்களை கடத்தியதாக சுமார் 2171 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 1.05 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 274 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

குண்டா் சட்டம்

 

இதேபோன்று மதுரை மாநகர போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக கடந்த 3 வருடங்களில் 1425 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1 கிலோவிற்கு கீழ் 1053 வழக்குகளும், 1 முதல் 20 கிலோ வரை -334 வழக்குகளும், 20கிலோவிற்கும் மேலாக வணிக ரீதியாக அதிகமாக 38 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம் எனவும், மதுரை மாநகரில் கஞ்சா கடத்தியது மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 2045 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை என 416 வழக்குகளில் நீதிமன்றம் மூலமாக தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. 

 

இதுவரை 3 ஆண்டுகளில் 18 கஞ்சா வழக்குகளில் வழக்குகளில் 10 ஆண்டுகளுக்கு மேலான குற்றவாளிகளுக்கு தண்டனை மற்றும் தலா 1லட்சம் அபராதமும் நீதிமன்றம் பெறப்பட்டுள்ளது. மாநகரில் 3 ஆண்டுகளில் கஞ்சா வழக்கில் 1.4. கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதே போன்று மதுரை மாநகரில் 3 ஆண்டுகளில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,784 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கஞ்சா மற்றும் போதை மாத்திரை வழக்கில் 31 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகர் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை புகார் குறைந்துள்ளது” என்று மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.