தமிழ் பற்று காரணமாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 1810ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் கல்லறையை (ராமநாதபுரம், எல்லிஸ் கல்லறையை) புனரமைத்து மணிமண்டபம் கட்டக் கோரிய வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.















 

ராமநாதபுரம் மோர்பண்ணையைச் சேர்ந்த தீரன்திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "கடந்த 1810ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். தமிழ் மொழி மீதான பற்றால் தனது பெயரை எல்லீசன் என மாற்றினார். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். திருவள்ளுவர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டார். இவரது காலம் தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக இருந்தது. ஓலைச்சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் ஆய்வுப் பணிகளுக்காக 1818ல் தென்மாவட்டங்களுக்கு வந்தார்.  6.3.1819ல் ராமநாதபுத்தில் இறந்தார்.

இவரது கல்லறை ராமநாதபுரம் வடக்குத் தெருவில் தேவாலய வளாகத்தில் உள்ளது. இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தான் சென்னை மற்றும் மதுரையில் எல்லீஸ் நகர் என பெயர் வைக்கப்பட்டன. ராமநாதபுரத்தில் அவரது கல்லறை பராமரிப்பின்றி உள்ளது. எனவே, எல்லிஸ் கல்லறையை புனரமைப்பு செய்யவும், அந்த இடத்தில் ஸ்தூபி மற்றும் மணி மண்டபம் அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை முதன்மை செயலர்கள், தொல்லியல் துறை ஆணையர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.



மற்றொரு வழக்கு















 

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கூடுதல் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யவும், கழிவுகளை முறையாக அகற்றி, சுத்தம் செய்யவும், பயணிகள் ஓய்வறை வசதியை அதிகரிக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரையை சீரமைத்து பராமரிக்க கோரி வழக்கு.

 

ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "ராமநாதபுரத்தில் கடந்த 1992ல் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது 29 பேருந்துகள் நிறுத்தும் வசதி இருந்தது. தற்போது 450 பேருந்துகள் வந்து செல்கிறது. சுமார் 20 ஆயிரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். 

 

30 ஆண்டான பேருந்து நிலையம் பாழடைந்துள்ளது. போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. பேருந்து நிலைய மேற்கூரை சேதமடைந்துள்ளன. மழைக்காலங்களில் அதிகளவு மழைநீர் வந்து தேங்குகிறது. எனவே, ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கூடுதல் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யவும், கழிவுகளை முறையாக அகற்றி, சுத்தம் செய்யவும், பயணிகள் ஓய்வறை வசதியை அதிகரிக்கவும், சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரையை சீரமைத்து பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி  வைத்தனர்.