2026ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார். திண்டுக்கல்லில் 7 தொகுதியிலும் தவெக வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பேசியுள்ளார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைமை சார்பில் தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மஹாலில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சி மேடையில் பேசிய பொதுச் செயலாளர் ஆனந்த் கூறும்போது, "தங்களை நேரடியாக அழைப்பதற்காக தான் இந்த கூட்டம். நேரம் இருந்திருந்தால் தங்களின் வீட்டிற்கு வந்து அழைத்திருப்பேன். தவெக தலைவர் விஜய் அறிவித்ததே போதும் என அம்மா, அப்பா என குடும்பத்துடன் வரும் கட்சிதான் தவெக. அன்பால் சேர்ந்த கூட்டம். தலைவர் ஒருமுகம் இருந்தால் போதும். காசு பணத்தால் சேர்ந்த கூட்டம் கிடையாது. உணர்வுடன் சேர்ந்த கூட்டம் தவெக உயிர் மூச்சு விஜய் தான்.

விக்கிரவாண்டி தவெக வெற்றி மாநாட்டில் வாகனங்கள் எண், இன்சூரன்ஸ், டிரைவர் பெயர், லைசென்ஸ் என அனைத்து பதிவுடன் Link பதிவு செய்து மாநாடு நடத்தும் ஒரே கட்சி தவெக மட்டும்தான். உண்மையான சகோதர்கள் உள்ள கட்சி.  2வது மாநாட்டிற்கு பஸ், வேன்,கார் கிடைக்காவிட்டாலும் வெற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். நமது தலைவர் விஜய் காசு பணம் கொடுக்க வேண்டியது இல்லை. அவரிடம் நல்ல மனசு இருக்கிறது. வயது முதிர்வின் காரணமாக அரசியலுக்கு வரவில்லை.

துறையின் உச்சத்தில் இருந்து தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். 2026ல் திண்டுக்கல்லில் 7 தொகுதி த.வெ.க வெற்றி பெறும். வேலை நாட்களிலும் தவெக கூட்டத்திற்கு அனைவரும் வருவர்கள். இன்று மக்கள் சேவை செய்ய ஆரம்பிக்கவில்லை. 32 வருடங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி தவெக தான். விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்று தெரியாமலேயே மக்களுக்கு உதவி செய்த ஒரே இயக்கம் நமது இயக்கம் தான். 2026ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” எனத் தெரிவித்தார்.

 

மதுரையில் தவெக மாநாடு
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் முதலாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய த.வெ.க. தலைவர் விஜய், இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21-ந் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெறுகிறது. ஏற்கனவே 25-ம் தேதி மதுரை மாநாடு நடைபெறும் என சொல்லிருந்த சூழலில் விநாயகர் சதுர்த்தி காரணமாக தேதி மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.