திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ காலனி பகுதியில் கடந்த 15ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி சிவா எம்.பி அவர், இல்லத்தை தாண்டி தான் செல்லவேண்டும். இந்நிலையில் நிகழ்ச்சியில் வைக்கபட்ட கல்வெட்டு, பேனர்களில் திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லை என அவருடைய ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், வீட்டில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.




இதனை தொடர்ந்து  காவல் நிலையத்திற்குள் புகுந்து திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் பெண் காவலர் தாக்கபட்டு அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம்  குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்கள் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.




இதனைத்தொடர்ந்து 5 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேரும் மறு உத்தரவு வரும் வரை மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி  உத்தரவிட்ட நிலையில், இன்று மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஐந்து பேரும் கையெழுத்திட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 5 பேருடன் மதுரை திமுகவினரும் காவல்நிலையத்திற்கு வந்திருந்தனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு புறப்பட்டு சென்றனர்.




 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண