சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் வாள் வைத்து வீடியோ வெளியிட்டு சாதி உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த விளையாட்டு வீடியோக்கள் சில நேரம் விபரீதமாக மாறிவந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாள் வைத்து கேக் வெட்டிய இளைஞர்கள் மற்றும் வாள் வைத்து போட்டோ சூட் நடத்திய இளைஞர்கள் மீதும் சிவகங்கை போலீஸ் எஸ்.பி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.



சிவகங்கை மாவட்டம். தேவகோட்டை பகுதியை சேர்ந்த முகமது அபுபக்கர் சித்திக் (22) ஐயப்பன்(35), சூர்யா (19), முகமது யாசிக் (21) மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து முகமது அபுபக்கர் சித்திக்கின் பிறந்த நாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடி, அதை வீடியோ  எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். இது பொது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கவனத்திற்கு வந்து, அவரின் உத்தரவின்பேரில் தேவகோட்டை நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீஸார் உடனடியாக செயல்பட்டு மேற்கண்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்கள்.



அதே போல் சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்த பிரேம்நாத் (28), ராகுல் (23), சங்கரலிங்கம் (24) ஆகியோர் மதகுபட்டி காவல் நிலைய குற்ற வழக்கில் முன்ஜாமின் பெற்று பிணையில் வந்தவர்கள். கிராமத்தில் வாள் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்துவருவதாக கிடைத்த தகவலின்படி மதகுபட்டி சார்பு ஆய்வாளர் மேற்கண்ட நபர்களை உடனடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்கள்.



சிவகங்கை மாவட்டம் தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !

மேலும் இது குறித்து, யாரேனும் சட்ட விரோதமாக வாள் வைத்திருந்தாலோ அல்லது சமூகவலைதளத்தில்  வாள்வைத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டலோ அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து பொது அமைதி நிலை நாட்டப்படும் என்று சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த.செந்தில்குமார்  தெரிவித்துள்ளார்.