சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பெரியார் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 60) உயரம் குள்ளமாக இருந்த நிலையிலும் அதனை பொருட்படுத்தாது பள்ளிப் படிப்பு படித்து கொண்டிருந்தபோதே சினிமா மீது தீராக்காதல் கொண்டிருந்தார். இதனால் 10-ஆம் வகுப்பு முடித்தவுடன் சென்னை சென்று பின்னர் மும்பைக்கு சென்று பட வாய்ப்பு தேடியுள்ளார்.  ஆனால் கிடைக்காத நிலையில் தனது முயற்சியை கைவிடாத மோகன் சென்னைக்கு மீண்டும் திரும்பினார். இந்நிலையில் அவ்வப்போது வீட்டில் தனது சகோதர , சகோதரிகளை தொடர்புகொண்டு தான் சினிமாவில் நடிக்கவுள்ளேன் என கூறியிருந்துள்ளார்.  இதனிடையே பல்வேறு முயற்சிகளுக்கிடையே நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான ஆபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் அப்பு கமல்ஹாசனின் நண்பராக நடித்திருந்தார். ஒரு காதல் பாடலிலும் கூட நடித்து நடனமும் ஆடியிருப்பார். 



 

 

இதே போன்று இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் சிவன் வேடமிட்ட யாசகர் போன்ற வேடத்தில் நடித்திருப்பார். இந்த நடிப்பு அனைவரின் பாராட்டுதலையும் அவருக்கு கிடைக்க வைத்தது. இதனிடையே தனது சொந்த ஊருக்கு சென்று திருமணம் செய்த மோகன் சில ஆண்டுகள் மனைவியுடன் வாழ்ந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தனது வீட்டிலிருந்து நடிக்க போவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் இரு ஆண்டுகளுக்கு முன்பாக வீட்டிற்கு சென்று பட வாய்ப்பு கிடைக்கவில்லை முயற்சி செய்துவருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த மோகன் பசிக்கொடுமை , வறுமை காரணமாக வேறு வழியின்றி நான் கடவுள் படத்தில் தான் நடித்த கதாபாத்திரமான யாசகத்தை எடுக்க எண்ணி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகே அமர்ந்து யாசகம் எடுக்க தொடங்கியுள்ளார். 



 

தான் சினிமாவில் பெரிய படங்களில் நடித்துவிட்டோம் நம்மை யாராவது பார்த்தால் அவமானமாக போய்விடும் என எண்ணிய மோகன் கடந்த ஒன்றரை வருடமாக முகம் முழுவதிலும் தாடியை வளர்த்தபடி யாசகம் பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதம் முன்பாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அங்குள்ள காவல்துறையினர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும் தான் குறித்த விவரங்களை தெரிவிக்காமல் ஆதரவற்ற நபர் என கூறியுள்ளார்.

 

மீண்டும் சிகிச்சை முடிந்து திருப்பரங்குன்றம் ரத வீதியில் அமர்ந்து யாசகம் எடுத்தபோது கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் காவல்நிலைய காவலரான பாலசுப்பிரமணியம் என்பவர் எதேச்சையாக யாசகராக அந்த பகுதியில் இருந்த மோகனின் பெயர் முகவரி கேட்டபோது சேலம் மேட்டூர் என்பதை மட்டும் கூறியுள்ளார்.  இதனையடுத்து நேற்று மாலை திடீரென மோகன் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கூறிய நிலையில், அவர் குறித்த தகவல் கிடைக்காமல் இருந்த நிலையில் காவலரான பால சுப்ரமணியன் மோகன் ஏற்கனவே கூறியிருந்த தகவலை நினைவு வைத்து சேலம் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் அளித்து மோகனின் குடும்பத்தினரை அடையாளம் கண்டுள்ளனர்.

 

அப்போதுதான் மோகன் ஆபூர்வ சகோதரர்கள், நான் கடவுள் ஆகிய படங்களில் நடித்த துணை நடிகர் மோகன் என்பது தெரியவந்துள்ளது. 



 

இதனையடுத்து அவரது உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்ட நிலையில் மோகனின் சகோதரரான சிவ சுப்ரமணியன் இன்று காலை மதுரைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துசெல்வதாக தெரிவித்த நிலையில் இறுதி சடங்கு செய்வதற்கான பணம் இல்லாததை அறிந்த காவலர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு உதவி செய்திடும் வகையில் மதுரை மிட் டவுண் ரோட்டரி கிளப் மற்றும் நேதாஜி மெடி ட்ரஸ்ட் ஆகியவற்றின் உதவியுடன் மோகனின் உடலை மதுரை கீரைத்துறை மின்மயானத்தில் தகனம் செய்வதற்கான  செலவினை ஏற்றுக்கொண்ட நிலையில் உடலை தகனம் செய்தனர். முன்னதாக உடலை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றபோது சகோதரர் சிவ சுப்ரமணியன் மற்றும் அவரது மகன் மட்டுமே இருந்த நிலையில் மோகனின. உடலுக்கு காவலர் பாலசுப்பிரமணியனும் , நேதாஜி மெடி ட்ரஸ்ட் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.