தேனி, கூடலூர் அருகே தோட்டத்து வேலைக்கு சென்றவரை வனத்துறையினர் சுட்டுக் கொலை செய்து உடலை கைப்பற்றி சென்றதாக புகார் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 




துப்பாக்கியால் சுட்டுக்கொலையா?


தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன்  வண்ணத்திப்பாறை பகுதியில்  உள்ள அவரது தோட்டத்திற்கு இரவு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் தனது தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக கூறி அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கூடலூர் வனத்துறையினர், ஈஸ்வரன் அத்துமீறி வனத்துக்குள் நுழைந்ததாகவும், ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினரை கத்தியை காட்டி அவர் மிரட்டி கொலை முயற்சி செய்ய வந்ததாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கி சூட்டில் பலியான ஈஸ்வரன் மீது வனத்துறையினர் உருவாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மரம் வெட்டியதாக வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.




உறவினர்கள் சாலை மறியல்:


தோட்டத்து வேலைக்குச் சென்ற கூலித் தொழிலாளியை வனத்துறையினர் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக புகார் கூறியும் அவரது உடலை கண்ணில் காட்டாத அளவிற்கு கொண்டு சென்று மறைத்து வைத்திருப்பதாகவும் புகார் தெரிவித்து  கம்பம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கம்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டு போராட்டதில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உறவினர் ஒருவர் கூறுகையில்.




நடந்தது என்ன?


உயிரிழந்த ஈஸ்வரன் என்பவர் கரு நாக்க முத்தன் பட்டியில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீர் கட்டும் தொழில் செய்து வந்ததாகவும்? அப்படி சென்று தோட்டங்களுக்கு இரவில் தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் ஈஸ்வரனுக்கும் அப்பகுதியில் உள்ள வனத்துறையினருக்கும் மிகவும் நெருக்கம் உள்ளது. குறிப்பக வனத்துறைக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். காட்டுத் தீ ஏற்பட்டாலோ,வனத்துறை செல்ல முடியாத இடத்திற்கு செல்ல வழி கேட்டால் இவர்கள் குடும்பம் தான் உதவும், வனத்துறைக்கு உதவியாக இருப்பவரை வனத்துறையினர் ஏன் சுட்டார்கள்? சுடப்பட்ட இடம் வனத்துறை பகுதியா? வருவாய் துறை பகுதியா?  அங்கு என்ன நடந்தது? அவர் எப்போது சுடப்பட்டார்?




கைது:


அவர் எப்போது இறந்தார் என்ற கேள்விகளுக்கு இதுவரை வனத்துறையோ காவல் துறையினரோ பதில் அளிக்க மறுக்கிறார்கள் என கூறி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் கலையாததால் காவல்துறையினர் குண்டுக்கட்டாக அவர்களை கைது செய்தும் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.