மதுரையில் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் மற்றும் ப்ரீமியம் பால் பாக்கெட் விற்பனை நிறுத்தம் - பால் பாக்கெட்டுகளின் விலையும் திடீர் உயர்வு - சில பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து விலை குறைப்பு என்பது போல பொதுமக்களை ஏமாற்றும் ஆவின் நிர்வாகத்தில் செயலால் பொதுமக்கள் அதிருப்தி.

 


தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. இதில் மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள ஆவின் மத்திய பால்பண்ணையில் இருந்து நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவின் பால் பாக்கெட்டுகள் டெப்போக்கள்  மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



 

இந்நிலையில் இன்று முதல் பால்பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதோடு, ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கி அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால் பாக்கெட்டு வகைகளும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கிரின்மேஜிக் என்ற பச்சை நிற பால்பாக்கெட்டுகள் விற்பனையும், 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ப்ரீமியம் பால் பாக்கெட் வகைகளும் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று ஆவின் சிறிய ரக பால் பாக்கெட்டான 250 மில்லி பால் பாக்கெட் 11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் 200 மில்லியாக குறைக்கப்பட்டு 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 




 

500 மில்லி டிலைட்(Violet) பால் பாக்கெட் 21.50 ரூபாயிலிருந்து  22 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. (ஆரஞ்சு )ப்ரீமியம் பால் பாக்கெட் 30 ரூபாய்க்கு பதிலாக டீ கடைகளுக்கி விற்பனை செய்யும் பால்பாக்கெட் வகையான டீ-மேட் என்ற பால் வகையினை 500 மில்லியாக மாற்றி அதனை 34 ரூபாய்க்கு விற்பனை செய்துவருகின்றனர். மேலும் தயிர் 200 மில்லி அளவு பாக்கெட்டானது 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் 145 மில்லியாக குறைக்கப்ட்டு -10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தயிர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஏற்கனவே 250மில்லி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது குறிப்பிடதக்கது. இதேபோன்று ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு 23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட் அட்டைதாரரருக்கு நவம்பர் 15 ஆம்  தேதிக்கு பின் நிறுத்தவுள்ளதாகவும் அதற்கு பதிலாக 28 ரூபாய் கோல்டு வகை பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய வலியுறுத்துவதாகவும் முகவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் திடீரென பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால் வகை விற்பனைகளை நிறுத்திவிட்டு கூடுதல் விலையில் உள்ள பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது.



 

மெல்ல மெல்ல பால் பாக்கெட்டுகளின் அளவை குறைத்து விலையை ஒரே மாதிரி இருப்பது போன்று மக்களை ஏமாற்றிவருவதையும், பொதுமக்களிடம் அதிகளவிற்கு விற்பனையாகும் குறைந்த விலையுள்ள பால் பாக்கெட்களுக்கு  பதிலாக விலை உயர்வான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்ய முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் கட்டாயப்படுத்தி வரும் அவல நிலையும் உருவாகியுள்ளாத சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.