ன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” - என ஆரம்பிக்கும் அன்புடைமை குறளுக்கு ஏற்றார் போல் தன்னுடை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக தாய் ஒருவர் இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய சம்பவம் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

 

அம்மாவின் ஒரே ஆசை மகள்:


 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாலகிருஷ்ணன் - ராக்கு தம்பதியினருக்கு பாண்டிச் செல்வி என்ற ஒரே ஒரு பெண்குழந்தை இருந்துள்ளார். சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு தன்னை அலங்காரம் செய்து கொள்வதென்றால் மிகவும் பிடிக்குமாம். பள்ளி சென்று வந்த பின் பெரிய பெண் போன்று சேலை கட்டி, பூ வைத்து வலம் வருவது வழக்கம். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அங்கும் மிகுந்த அலங்காரத்துடன் வலம் வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரம்மாண்டமாக விசேஷம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளார். ஒரே பெண் என்பதால் அவர் சொல்வதற்கு எல்லாம் ஆமோதித்துள்ளார் தாய் ராக்கு. பிறந்த நாள் உள்ளிட்ட தினங்களில் விசேஷங்களை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர்.

 

மகளின் நினைவாக பொருட்கள்


 

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் 8-ம் வகுப்பு படிக்கும் போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே பாண்டிச்செல்வி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே மகள் மரணமடைந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்த ராக்கு தனது மகள் தன்னுடனேயே வாழ்ந்து வருவதாக எண்ணி வலம் வருகிறார். தற்போது அவரது மகள் உயிரோடு இருந்திருந்தாள் 14 வயது எட்டியிருக்கும் என்றும் உயிருடன் இருந்தால் பூப்பெய்து இருப்பார் என எண்ணி அவருக்கு பூப்புனித (சடங்கு) நீராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார். உறவினர்கள் அனைவரையும் அழைத்து நீராட்டு விழாக் கொண்டாட எண்ணிய மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிக்கை வைத்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச் சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினார்.

 

கண்ணீரை வரவழைத்த அம்மாவின் பாடல்:


 

மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்டவைகளும் உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச் சேலை, நகை, சீர் வரிசை உள்ளிட்டவைகளும் பரப்பி வைக்கப்பட்டன. விசேஷங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் அலங்கரிக்கப்பட்ட கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு, அவரது கணவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டோ எடுத்து கொண்டனர். ராக்குவிற்கும் அவரது மகள் பாண்டிச்செல்விக்கும் “என் பொம்முகுட்டி அம்மாவிற்கு“ என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினி மகளை பறிகொடுத்த பின் பாடும் “கண்ணே நவமணியே உன்னை காணாது நெஞ்சு” என்ற பாடல் ரொம்ப பிடிக்குமாம், அடிக்கடி தாயும் மகளும் அந்த பாடலை பாடுவது வழக்கம், தினசரி இரவிலும் அந்த பாடலை பாடிய பின்தான் பாண்டிச்செல்வி தூங்குவாராம், துரதிஷ்டவசமாக அந்த பாடல் அவரது வாழ்க்கையில் உண்மையாகி போனதுதான் சோகம், பூப்புனித விழாவில் தாயார் ராக்கு அந்த பாடலை பாடியது உறவினர்களிடம் கண்ணீர் வரவைத்தது.