வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட மதுரை ஏ.வி.மேம்பாலம், வெள்ள பெருக்கையும், இயற்கை சீற்றங்களையும் கடந்து 136 ஆவது ஆண்டுகளாக அதே கம்பீரத்தை தாங்கி நிற்கிறது. முல்லை பெரியாறு அணையை போல பலராலும் போற்றப்படும்  ஏ.வி பாலம் மதுரையின் மிக முக்கியமான அடையாளம். மதுரை வழியாக ஓடும் வைகை ஆற்றில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன், முழுவதுமே வெள்ளப்பெருக்கு காணப்படும். இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து பாயும். ஆற்றங்கரைகளில் மதுரை சித்திரை  திருவிழா கோவிந்தா... கோவிந்தா... சத்தத்துடன் களைகட்டும். இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாத காலத்தில் மதுரையின் வட பகுதியில் இருந்து தென்பகுதிக்குச் செல்ல முடியாமல் இரு பகுதி மக்களும் தனித்தீவில் இருப்பது போல் தவித்தனர். மதுரை மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு விடிவு ஏற்படும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் ஏ.வி.மேம்பாலத்தை கட்டினர். இந்த பாலம், கட்டி இன்று டிசம்பர் 8ஆம் தேதியுடன் 135 ஆண்டுகளை நிறைவு பெற்று 136 ஆண்டை தொடங்குகிறது.









 

நூற்றாண்டு கடந்த ஏராளமான வெள்ள பெருக்கையும், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி தற்போது வரை கம்பீரம் குறையாமல் காணப்படும் இந்த ஏ.வி.மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் இன்று ஏ.வி.மேம்பாலத்தின் 136-வது கொண்டாட்டம் மற்றும் அதனை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விழா எடுத்தனர். இதில் தலைமை M.ராஜன் வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர். கேக் வெட்டிக் துவக்கி வைத்தார் சமூக சேவகர் இல.அமுதன், வழிகாட்டி மணிகண்டன், நீர் நிலைகள் அபுபக்கர், ஹக்கீம், சமூக ஆர்வலர் சங்கரபாண்டி, மக்கள் சேவகன் அசோக், அறிவுச்செல்வம், பார்த்தசாரதி, மணிகண்டன், பழனிவேல்ராஜன், திருமங்கலம் கார்த்திக், பாலன், செந்தில், கோபிநாத் உட்பட சமூக ஆர்வலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




 

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் நம்மிடம்...,” ஏ.வி பாலம், கட்டுவதற்கு அப்போது ரூ.2.85 லட்சம் மட்டுமே செலவாகியுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை வாகனங்களின் எடையையும், அதன் வேகத்திற்கும் ஈடுகொடுத்து இந்த பழம்பெரும் பாலம் வலுவாக இருக்கும். இந்த ஏ.வி. மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்று வரை சான்றாக உள்ளது. மதுரையில் அதற்கு பிறகு கட்டிய பாலம் இடிக்கப்பட்டு சமீபத்தில் புதிய பாலம் கட்டிய வரலாறும் நடந்துள்ளது. ஆனால், இந்த பாலம் மட்டும் தற்போது வரை உயிர்ப்புடன் இயங்கி கொண்டிருக்கிறது. மதுரை மக்களின் நெஞ்சங்களில் குடிக் கொண்டுள்ளது. இத்தனை சிறப்புமிக்க இந்த ஏ.வி.மேம்பாலம்பிறந்த நாள் கொண்டாடுவது அவசியமானது. தற்போது பாலத்தின் அடிப்பகுதிகள், கைப்பிடி சுவர்கள் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து கொண்டிருக்கிறது.



 

பாலத்தின் அடிப்பகுதி கான்கிரீட் உதிர்கிறது. பாலத்தின் அடிப்பகுதியில் பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் செல்லும் சில வட்ட வடிவத் தூண்களின் அடித்தளமும் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அடியில் உள்ள கருங்கல்கள் தண்ணீர் செல்வதால் பெயர்ந்து கொண்டிருக்கிறது. பாலத்தின் அஸ்திவாரத்தை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னம் என்று அறிவிப்பதை போல் ஏ.வி. மேம்பாலத்தை மதுரையின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்” என தெரிவித்தார்.