காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொடங்கி, சர்வதேச தோல்வி நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 




ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.


உருவான சாம்சங் சங்கம்


இந்தநிலையில், சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.




தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் , கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.


ஊழியர்களின் கோரிக்கை என்ன ?


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரித்திட வேண்டும்.


சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.




போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பேச்சுவார்த்தை தோல்வி 


சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இது தொடர்பாக நடைபெற்ற ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் இன்று, (7-10-2024) காலை 11 மணியளவில் இருங்காட்டு கோட்டை தொழிலாளர் நல துணை ஆணையர் அலுவலகத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் சாம்சங் ஊழியர்கள் பிரச்சினையில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இன்று இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதால், கூடுதல் கவனம் பெற்றுள்ளது.இந்தப் பேச்சு வார்த்தையில் தொழிற்சங்கம் சார்பில், ஒன்பது பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்வார்கள் என சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது‌.




இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், இந்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கை, சங்கம் அங்கீகரிக்க படம் வேண்டும் என்பதுதான் எனவும்,எங்களுக்கான சம்பளத்தை நாங்கள் பெறுவது மிக மிக எளிது என்பதை மட்டும் சம்பள பிரச்சினை குறித்து விவாதிப்பவர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.சிஐடியுக்கு சம்பள உயர்வு எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும் அது மிகவும் சாதாரண நடவடிக்கை.‌ சம்பள உயர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தின் மூலமாக விவாதிப்பதற்கு முதலில் சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்