Agriculture solar pump subsidy in tamilnadu: காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மின் கட்டமைப்பு சாராத தனித்து இயங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் 70 சதவீத மானியத்தில், அமைத்துக் கொடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சூரிய சக்தி மின் இணைப்பு
வேளாண்மையில் நீர்ப்பாசனத்திற்கு தேவையான எரி சக்தியினை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013-14 ஆம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக் கொடுத்து வருகிறது. சூரிய சக்தி பம்வு செட்டுகள் மூலம் மின் இணைப்பு தேவையின்றி பகலில் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.
மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் (PM-KUSUM) கீழ் 2025 -26 நிதி ஆண்டில் தமிழகத்திற்கு 1000 மின் கட்டமைப்பு சாராத தனித்து இயங்கும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 9 எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
தகுதியுள்ள விவசாயிகள் யார் ?
· மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள தனிநபர் விவசாயிகள்
· மின் இணைப்பு இல்லாத, பாசன வசதிக்கான சமுதாயக் கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள்
புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள், நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் (Safe Firka) இருத்தல் வேண்டும்.
இதர பகுதிகளில் ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.
மானிய விவரம்
இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் ( மாநில அரசு 40%. மத்திய அரசு 30 % ) இதர விவசாயிகளுக்கு 60 % மானியத்திலும் ( மாநில அரசு 30%, ஒன்றிய அரசு 30%) அமைத்துத் தரப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 10% மானியம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவது எப்படி
1. சூரிய சக்தி பம்பு செட்டுகளை பெற விரும்வும் விவசாயிகள் இலவச மின் இணைப்புக் கோரி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEGO) பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
2. இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும் போது, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை நுண்ணீர் பாசனத்துடன் இணைத்திட உறுதிமொழி அளித்திட வேண்டும்.
3. விண்ணப்பிக்க : இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நேரடியாக https://pmkusum.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது விவசாயிகள் நேரடியாக அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளர் (வே.பொ) / இளநிலைப் பொறியாளர் (வே.பொ) களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் கீழ்க்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது
உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப்பொறியியல் துறை,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்.
அலைபேசி எண் - 9444073322..