புரட்டாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்க தேர் உற்சவம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


புரட்டாசி மாத பௌர்ணமி


சக்தி தலங்களில் முதன்மையானதாக விளங்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை ஒட்டி தங்கத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தங்கத்தேர் உற்சவத்தை ஒட்டி காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கருநீலம் நிற பட்டு உடுத்தி மல்லிகைப்பூ, கொடி சம்பங்கி பூ சாமந்தி பூ, பஞ்சவர்ண பூ மாலைகள் அணிந்து, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளினார்.


பின்னர் மேளதாளங்கள் முழங்க உபயதாரர்கள், பக்தர்கள், தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல காஞ்சி காமாட்சி அம்மன், கோவில் வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாத பௌர்ணமி ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் உற்சவத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டம்,வெளி மாநிலம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "ஓம் சக்தி,பராசக்தி" கோஷமிட்டு காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.


காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் - Kanchipuram Kamachi Amman Temple 


கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது .


 


சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர். அத்தருணம் பராசக்தி, காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்


உக்கிர உருவம் கொண்டாள்


கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார். பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.