பரந்தூர் பசுமை விமான நிலையம்

 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



 


தொடரும் போராட்டம்  ( parandur airport protest )


 

விமான நிலையம் அமைய உள்ள 5700 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், 3700 ஏக்கர் நிலம் விவசாயிகள், கிராம மக்களிடம் இருந்து நில எடுப்பு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள நிலங்கள் அரசு நிலமாக உள்ளது. கிராம மக்களின் போராட்டம் 573 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3  மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து ஊழியர்களும் பணி அமர்த்தபட்ட பிறகு, நில எடுப்புக்கான பொது அறிவிப்பு வெளியிடுவதும், நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர் மட்டக் குழு:


 

தமிழக அரசு விமான நிலையம் அமைய உள்ள இடத்தையும், நீர் நிலைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு கள ஆய்வு மேற்கொண்டது. உயர்மட்ட குழு அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் , என கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்திருந்தது. 

தகவல் அறியும் உரிமை சட்டம்:


இந்தநிலையில் ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த, சுப்பிரமணியன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில் , சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்திடம் அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மச்சேந்திரநாதன் ஐஏஎஸ் குழு மேற்கொண்ட ஆய்வறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்ற பதில் வெளியாகி உள்ளது.



 

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், இதுவரை கருத்துக்கேற்பு கூட்டம் விவசாயிகளிடமும் கிராம பொதுமக்களிடமும் எத்தனை முறை கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றுள்ளது , என கேள்வி கேட்கப்பட்டதற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில், " சுற்றுச்சூழல்  மதிப்பீட்டின் பொழுது உரிய சட்ட விதிகளின்படி பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்படும்" என தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை எந்த கருத்து கேட்போர் கூட்டமும் நடைபெறவில்லை என வெளியே தகவல் வெளியாகி உள்ளது.

 

 

இதுகுறித்து ஏ.பி.பி நாடு சார்பில் பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்புக் குழுவை சேர்ந்த சுப்பிரமணியனிடம் பேசினோம், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே நிலம் எடுப்பதற்கான பணியை தமிழ்நாடு அரசு செய்து வருவது அம்பலமாகியுள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். ஏற்கனவே அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிரியின் அடிப்படையில் இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர்நிலைகள் இருக்கும் பகுதி என்பதால் இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு சாத்தியம் கிடையவே கிடையாது. இது குறித்து நாங்கள் உயர் மட்ட குழுவிடமும் தெரிவித்திருக்கிறோம்.



 

 

ஆனால் இதுவரை உயர் மட்ட குழு எந்தவித அறிக்கையும் சமர்ப்பிக்க படாத நிலையில் 300க்கும் மேற்பட்ட அதிகாரிகளை நியமிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசும் ஈடுபட்டு வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கின்றோம். பொதுவெளியில் அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக அறிவிக்க அவர்கள் தயங்குகிறார்கள். விமான நிலையம் அமைப்பதற்கு தொடர்பான அரசாணையை வெளியிட்ட பிறகும், அதை நாங்கள் போராடி தான் பெற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், உயர்மட்ட குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே நிலம் எடுப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.