பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாம்புரம் கிராம மக்கள் தொடர்ந்து 690- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


பரந்தூர் பசுமை விமான நிலையம்


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( parandur greenfield airport ) அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடரும் போராட்டம்  ( parandur airport protest )


கிராம மக்களின் போராட்டம் 690 வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின்  போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இதுபோக கிராம சபைகளில் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, பேரணி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்திலும் ஏகாம்பரம் கிராம மக்கள் ஈடுபட்டனர் இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3  துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 நில எடுப்பு அறிவிப்புகள்


இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர், மகாதேவி மங்கலம், சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள். ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்தநிலையில் தேர்தல் முடிவு பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம்  அமைப்பதற்கு மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தொழில் முதலீடு ஊட்டுவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில்,  புதிய பசுமை வேலி விமான நிலையம் திட்டம்  அமைப்பதற்கான  நில எடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


கிராம மக்கள் அதிர்ச்சி முடிவு


இரவு நேர போராட்டம் 700-வது நாளை, வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை எட்ட உள்ளது. இதனால் கிராம மக்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் குடியர இருப்பதாக நூதன போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், விவசாயத்தையும், நீர் நிலைகளையும் காக்க போராடிவரும் விவசாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல், நிலம் எடுப்பதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு வருகிறது.


விவசாயிகள் வாழ தகுதியில்லாத தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை பெருமையாக கருதுகிறோம். சொந்த மண்ணில் அகதியாக வாழ்வதைவிட, மொழி தெரியாத ஆந்திர மாநிலத்தில் அடிமையாக வாழ்வது என ஒட்டுமொத்த மக்கள் முடிவு எடுத்திருப்பதாக கூறுகின்றனர். எனவே ஆந்திர மாநிலத்தில் இடம் தஞ்சம் அடைய, போராட்டக் குழுவினர் சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்