Parandur Airport: பரந்தூர் ஏர்போர்ட், மாஸ்டர் பிளான்.. உருவாகும் 'டவுன்ஷிப் ப்ராஜெக்ட்'.. சிறப்பம்சங்கள் என்ன ?
Parandur Airport Latest News: பரந்தூர் விமான நிலைய திட்டத்தால், பாதிப்படையும் மக்களுக்கு டவுன்ஷிப் அமைத்து மறுகுடியமர்வுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் திட்டம் தீவிரமடைந்துள்ளது.

Paranthur Airport Townships: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு, பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் அதிகரித்து வருவதால் இரண்டாவது விமான நிலையம் காலத்தின் தேவையாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்முறையாக பரந்தூர் விமான நிலையத்தை தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க உள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. சுமார் 29,150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த விமான நிலையம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்று ஏற்பாடுகள் என்ன ?
பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட டவுன்ஷிப் உருவாக்கித் தரப்பட உள்ளது. டவுன்ஷிப் உருவாக்குவதற்கான மாஸ்டர் பிளான் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தனியார் வசம் இருக்கும் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன .
விமான நிலையம் அமைக்கப்படுவதால் 1005 குடும்பங்கள் பாதிக்கப்பட உள்ளன. இவர்களுக்கு, சிறுவள்ளூர், மடப்புரம், மகாதேவி மங்கலம் மற்றும் மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளனர்.
டவுன்ஷிப் ப்ராஜெக்ட்
மறுகுடியமர்வு செய்வதற்காக சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குடியிருப்பு வசதிகள் செய்து தரப்பட உள்ளன. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன பள்ளி, குடிநீர், சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளன. டவுன்ஷிப் அமைப்பில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
புதிய நகரம் உருவாக்கப்பட்டு அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நகரம் அமைக்கப்பட உள்ளதால் இந்த திட்டத்தை செயல்படுத்த மாஸ்டர் பிளான் எனப்படும் முழு திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது.
விமான நிலைய பணிகள் தொடங்குவது எப்போது ?
இதற்காக தற்போது நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாஸ்டர் பிளாண்ட் தயாரித்து வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் தற்போது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியை துவங்கி உள்ளது. அந்த நிறுவனம் தற்போது மூன்று கருத்து அடங்கிய அறிக்கையை தயாரித்து வழங்க வேண்டும். அதில் ஒன்றை தேர்வு செய்து அதற்கேற்ப டவுன்ஷிப் உருவாக்கப்பட உள்ளது. டவுன்ஷிப் உருவாக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு குடிய அமர்த்தப்படுவார்கள் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கி 2028 இல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது, என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.