நாளை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் காஞ்சிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது


 


 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்



காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான கோயில்களில் ஒன்றான வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2024  வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் மிக முக்கிய  உற்சவங்கள் நடைபெற்று வரும் நிலையில்,   நாளை ஞாயிற்றுக்கிழமை ( 26-05-2024 ) அன்று திருத்தேர் உற்சவமும் 28.05.2024 அன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்த உற்சவங்களில் பங்கேற்றுக் கொள்ள, சுமார் 4  லட்சம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  உள்ளூர் மட்டும் இல்லாமல்  வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்கின்றனர்.



திருத்தேர் செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்களில் மின்விபத்து ஏற்படாவண்ணம் தற்காலிகமாக மின் இணைப்பை துண்டித்தல், மின்கசிவு ஏற்படாவண்ணம் பாதுகாத்தல் மற்றும் தேருக்கு இடையூராக உள்ள மின்சார ஒயர்களை முறைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.



போக்குவரத்து மாற்றம்


 


திருத்தேர் 26.05.2024  வீதி உலா  நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள் கீழ்காணும் தற்காலிக பேருந்துநிலையம் வரை வந்துசெல்லும்  என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


பழைய ரயில் நிலையம் :   தாம்பரம்,  செங்கல்பட்டு,  வாலாஜாபாத் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும்
 
ஒலிமுகமது பேட்டை தற்காலிக பேருந்து நிறுத்தம்: திருத்தணி, திருப்பதி, அரக்கோணம்,  ஓச்சேரி,  வாலாஜா,  வேலூர், பெங்களூர்  ஆகிய பேருந்துகள் இங்கிருந்து செல்லும்


ஓரிக்கை -- மிலிட்டரி ரோடு:  உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள்  புறப்படும்.


மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: வந்தவாசி,  செய்யார்,  சேலம், திருச்சி  திருவண்ணாமலை, விழுப்புரம்,  திண்டிவனம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர் ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் புறப்படும்.


புதிய ரயில் நிலையம்: சுங்குவார்சத்திரம்,  ஸ்ரீபெரும்புதூர்,  பூந்தமல்லி,  சென்னை ஆகிய ஊர்களுக்கு இங்கிருந்து பேருந்துகள் செல்லும்.


 


காவல்துறை ஏற்பாடு என்ன ?



 


இத்திருவிழாவின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் உட்பட சுமார் 1500 காவல்துறையினருடன் ஊர்க்காவல்படையினர். NCC/NSS மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முக்கிய இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  நகர் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


 


காவல்துறை சார்பில் வேண்டுகோள் என்ன ?


1.  குழந்தைகள் மற்றும் வயது முதியோர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் 
2. பொதுமக்களுக்கு உதவியாக முக்கிய இடங்களில் காவல்துறை உதவிமையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு காவல் உதவி மையங்களை நாடலாம்.
3. மாநகராட்சியின் சார்பில் தேர்செல்லும் முக்கிய வீதிகளில் குடிநீர் தொட்டிகள், நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோக  பக்தர்கள் சார்பிலும் இலவசமாக நீர் ,மோர்   உணவு ஆகியவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தேவை என்றால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
4. குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு தொடர்ந்து நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.