காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று மேயர் மகாலட்சுமி யுவராஜ்க்கு எதிராக, நம்பிக்கை இல்லா தீர்மானம் நடைபெற உள்ளது.


 


காஞ்சிபுரம் மாநகராட்சி


 


காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.





திமுக சார்பில் மகாலட்சுமி யுவராஜ் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவரும் போட்டியிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. இருந்தும் மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார்.  காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது.


தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனைகள்


ஒவ்வொரு முறை மாமன்ற கூட்டம் நடைபெறுகின்ற பொழுதும், கூட்டம் சலசலப்புடன் நடைபெற்று வந்தது. இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.




 


நம்பிக்கை இல்லாத தீர்மானம்


தொடர்ந்து அதிருப்தி கவுன்சிலர்கள் எதிர்க்கட்சி கவுன்சிலர்களுடன் இணைந்து, மேயருக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நம்பிக்கை இல்லாத தீர்மானம் நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக, மாநகராட்சி விவகாரங்களில் மேயர் கணவர் யுவராஜின் தலையீடு அதிகமாக இருந்ததால் கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


மேயர் தரப்பு வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?


நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற மாநகராட்சியில், உள்ள ஐந்தில் நான்கு பங்கு கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஓட்டு போட வேண்டும். இதன்படி மொத்தம் உள்ள 51 கவுன்சிலர்களின் 41 பேர் கூட்டத்திற்கு வந்து, தீர்மானத்தின் மீது ஓட்டளிக்க வேண்டிய நிலை உள்ளது. அதே நேரம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரிக்க 5 ஒரு பங்கிற்கு மேற்பட்டோர் ஓட்டளிக்க வேண்டும். அதன்படி 10க்கும் மேற்பட்டோர் ஓட்டளித்தால்,  மேயர் பதவி தப்பும். மேயர் தரப்பை பொறுத்தவரை, தற்பொழுது வரை 13 கவுன்சிலர்கள் மேயர் தரப்பிற்கு ஆதரவாக உள்ளனர்.




என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?


தீர்மானம் மீது ஓட்டளிக்க வேண்டும் என்றால், கட்டாயம் 41 கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். இதற்கு குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்றாலும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். மேயருக்கு ஆதரவாக இருக்கும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தாலும், அது மேயருக்கு சாதகமாகவே முடியும். நாளை நடைபெறும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் ஓட்டெடுப்பில் மேயர் தனது பதவியை காப்பாற்றிக் கொள்வாரா ? அல்லது நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் எதிரணி வெற்றி பெறுவார்களா என கேள்வி எழுந்துள்ளது.