காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.2.96 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு கட்டடப் பணிகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சர் ஆர்.வீ. இரஞ்சித்குமார் ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் கட்டடங்கள் திறப்பு
விப்பேடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இதேபோல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் முத்துவேடு ஊராட்சியில் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டிலும், ஒழக்கோல்பட்டு ஊராட்சியில் ரூ.33 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகங்களை அமைச்சர்கள் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். மேலும், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.31.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.
பொதுநல மற்றும் சுகாதாரத் திட்டங்கள்
நரப்பாக்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காரிய மேடை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தாமல் ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில், 15-வது நிதிக்குழு நிதி மூலம் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். அங்கு அமைச்சர்கள் தங்களது இரத்த அழுத்த பரிசோதனையையும் செய்து கொண்டனர்.
திம்மசமுத்திரம் ஊராட்சி மற்றும் களக்காட்டூர் ஊராட்சி கே.எஸ்.பி. நகர் ஆகிய பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தலா ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டன. தொடக்க நிகழ்வாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பள்ளி கூடுதல் வகுப்பறைகள் ஆய்வு
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள C.M.S மேல்நிலைப் பள்ளியில் ரூ.94 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடந்த பள்ளி கோடை விடுமுறை நாட்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு முயற்சியாக மேற்கொண்ட “புத்தகம் தரும் புது உலகம்” என்ற தலைப்பிலான திட்டத்தின் கீழ், வட்டார அளவில் நடத்தப்பட்ட புத்தகம் வாசிப்பு, மதிப்புரை மற்றும் விவாதப் போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வான இரட்டையர்களுக்கு வாழ்த்து
C.M.S மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் இரட்டையர்களான தேவேஷ் மற்றும் சர்வேஷ் ஆகியோர் யோக கலையில் சிறந்து விளங்கி, எதிர்வரும் சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் யோக பிரிவில் கலந்துகொள்ளத் தேர்வாகியுள்ளனர். சாதனை படைத்த இந்த மாணவர்கள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
