செங்கல்பட்டு - அரக்கோணம் இடையே ரூ.1538 கோடியில், இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கு வரைவு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த மாதம், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் கூட்டத்தை கூட்ட உள்ளது.
அரக்கோணம் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ரயில் பாதை
சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி, வருகின்றனர். அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக இயக்கக்கூடிய மின்சார ரயில் சேவையும், முக்கிய ரயில் சேவையாக இருந்து வருகிறது.
அரக்கோணத்தில் இருந்து, திருமால்பூர், காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், கிண்டி வழியாக சென்னை கடற்கரைக்கு இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை அருகில் இருக்கக்கூடிய மிக முக்கிய மாவட்டமான காஞ்சிபுரம் தலைநகரிலிருந்து, தினமும் பல ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் மூலமாக, சென்னைக்கு பணி நிமிர்த்தமாக சென்று வருகின்றனர்.
பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை
காஞ்சிபுரத்திலிருந்து தினமும் 8 மின்சார ரயில்கள் வரை சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகின்றன. அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை, ஒரு தண்டவாளம் மட்டுமே இருப்பதால் கூடுதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் சில நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்வே கடந்து செல்லும் போது பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஒரு சிலர் சமயங்களில் பயணிகள் திடீரென போராட்டத்திலும் ஈடுபடுவது, தலைவலியை அதிகரித்து வருகிறது. இதனால் விரைவில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் இறங்கி உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை
செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு இரண்டாவது ரயில் பாதை, அமைப்பது தொடர்பான வரைவு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ரயில் பாதை அமைப்பதற்கு ரூபாய் 1538 கோடி செலவாகும், என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த மாதம் இது தொடர்பான, பங்குதாரர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு கடந்த 2023 அக்டோபர் மாதம், தனியார் நிறுவனம் இடம் ஒப்படைத்தது. இந்த இரண்டாவது ரயில் பாதை பயன்பாட்டிற்கு வந்தால் தினமும் 13 ரயில்கள் இயக்கம் இடத்தில், 40 ரயில்கள் வரை விரிவுபடுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் ரயில் மட்டும் இல்லாமல், சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இதேபோன்று காஞ்சிபுரம் அடுத்துள்ள வாலாஜாபாத் வாகன ரேக்குகள் 800 மீட்டர் நீளம் சரக்கு போக்குவரத்து நடைபாறைகளுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று காஞ்சிபுரத்திற்கு மூலப்பொருட்களை கொண்டு வரும் சரக்கு ரயில்களும் கூடுதலாக இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2024 - 2025 ஆண்டில் 83 ரயில்களில் 1.56 மில்லியன் டண்களை சரக்கு ரயில்கள் கையாண்டுள்ளன. இது கடந்தாண்டை விட 7 புள்ளி ஒரு சதவீதம் அதிகம். இந்தியாவிலேயே அதிக அளவு கார்களை ஏற்றுமதி செய்யும் இடமாக வாலாஜாபாத் இருந்து வருகிறது. வாலாஜாபாத்தில் இருந்து 392 ரேக்ஸ் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது சுமார் 32.4 கோடி ரூபாய் இதன் மூலம் வருமானம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.