World Diabetes Day 2022: இன்று உலக நீரிழிவு நோய் தினம். 


உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும்  நவம்பர் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் 1991 ஆம் ஆண்டு உலக நீரிழிவு நோய் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து இந்த நாளை அறிவித்தது.  2006 ஆம் ஆண்டு இதை ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சிறப்பு நாளன்று நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடிக்கைகள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. 


உலகம் முழுவதும் 422 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் (world health organization) புள்ளிவிரவ தகவல் சொல்கிறது. மேலும்,  நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எச்சரிக்கிறது. மேலும், உலக அளவில் 1.5 மில்லியன் பேர் நீரிழிவால் உயிரிழந்துள்ளனர்.


இந்தாண்டுக்கான கருப்பொருள்:


ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளோடு இந்த நாள் கடைப்பிடிக்கப்படும். ஐ.நா. சபை அறிவித்த கருப்பொருள் அனைவருக்கும் நீரிழிவு குறித்த விழிப்புணர்வும் கல்வியும் (access to diabetes education’), அனைவருக்குமான நீரிழிவு நோய்க்கான சிகிச்சைகள்  ('access to care') என்ற நோக்கம் ஆகும். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த கருப்பொருள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளும், போதிய அளவிலான விழிப்புணர்வு கிடைத்திட நாடுகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.


வரலாறு :


நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட்  ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே  நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது.  ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 


2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய்க்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு உயிர்க்காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுதல் போன்றவை இந்த நாளின் மையமாக உள்ளது. 


நீரிழிவு நோய்:


நம் உடல் உள்ளுறுப்புகள் தொடங்கி, சுரப்பிகள் வரை அனைத்தும் சீராக செயல்பட வேண்டும். இல்லையேல் நமக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும். நீரிழிவும் நோயும் அப்படியே! இன்சுலின் அளவு அதிகமாவது அல்லது அதில் ஏற்படும் சீரற்ற தன்மை ஆகியவற்றினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. 


அறிகுறிகள்:


அடிக்கடி சிறுநீர் கழித்தல், எப்போதும் பசி ஏற்படுவது அல்லது பசிப்பது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகமாகக் குடிப்பது, பெரும்பாலும் சோர்வான உணர்வு இருக்கும், உடலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும்,   காரணமில்லாமல் எடை குறைதல், மிகக் கூடுதல் எடை, கால் மரத்துப் போய் உறுத்துதல், மங்கலான பார்வை உள்ளிட்டவைகள் இவற்றின் அறிகுறிகளாக சொல்கிறது மருத்துவ உலகம்.


சிகிச்சை:


நீரிழிவு நோய்க்கான அறிகுகள் தென்படுமாயின் உடனடியாக மருத்துரை அணுகு அதை கண்டறிவது முக்கியம். இன்றைய மருத்துவ உலகில் பல சிகிச்சைகள் இருந்தாலும் நோய் வராமல் தடுப்பதே சிறந்தது.


இயற்கை முறையில், மருந்துகள் இல்லாமலேயே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க முடியும். அவை என்னவெனப் பார்க்கலாம்.


 உடற்பயிற்சி: ரெகுலரான உடற்பயிற்சி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது தசை அசைவுகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோய் வராமல் தடுக்க சில எளிய உடற்பயிற்சிகள் விறுவிறுப்பான நடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், நடனம், சைக்ளிங் போன்றவை உதவும்.




கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்தல்: 


அதிகளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்ககூடும். எனவே அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது. 


சீரான உடல் எடை:


ஆரோக்கியமான உடல் எடை, நீரிழிவு நோயை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது. மற்றும் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைக்கிறது. 


நார்ச்சத்து உணவுகள்:


காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகிய நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து கார்போஹைட்ரேட்டுகளின் சர்க்கரை செரிமானத்தையும் சர்க்கரையை உறிஞ்சுவதையும் மெதுவாக்குகிறது, இது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.


மன அழுத்தம் வேண்டாமே:


 மன அழுத்தம் உடலில், குளுகோகன் மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உடல் பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.


போதுமான அளவு தண்ணீர் குடிப்பது: 


தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் டிஹைட்ரேட் ஏற்படாமல் (நீரிழப்பு) தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டின் மூலம் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை வெளியேற்றப்படுகிறது.


போதுமான அளவு தூக்கம்: 


எந்தவித இடையூறும் இல்லாமல் தூங்குவது நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஒழுங்கற்ற தூக்கப் பழக்கம் கார்டிசோலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.