டெல்லியில் தன் லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி அன்றாடம் நாய்களுக்கு இரையாக்கிய அஃப்தாபின் கதையையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் நாம் திணறிக் கொண்டிருக்க உ.பி.யில் அரங்கேறியுள்ளது, பெண்ணுக்கு எதிரான ஒரு கொடுங்குற்றம்.


உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் கேட்பாரற்று ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை போலீஸார் திறந்தபோது உள்ளே பாலீத்தீன் பையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் இருந்தது. அந்த சடலம் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன. அந்தப் பெண்ணை ஒருவரோ அல்லது பலரோ இணைந்து துன்புறுத்தி கொலை செய்து சாலையில் இவ்வாறு வீசியிருக்கலாம் என சந்தேகப் படுகின்றனர். யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் இரவு நேரத்தில் போக்குவரத்து மிகவும் குறைவு என்பதால் சடலத்தை அங்கு வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகப் படுகின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.


ம.பி.யில் ஒரு சம்பவம்: 
மத்திய பிரதேசம் ஜபல்பூரில் மற்றொரு கொடூர கொலை சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள மேகலா என்ற ஓட்டலில், அபிஜித் படிதார் என்பவர் கடந்த 6-ம் தேதி அன்று தனியாக வந்து தங்கினார். மறுநாள் அவரைப் பார்க்க சில்பா ஜாரியா(25) என்ற இளம் பெண் வந்துள்ளார். மதியம் இருவரும் அதே ஓட்டலில் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அபிஜித் அறைக் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. மறுநாள் ஓட்டல் நிர்வாகத்தினர், அறைக் கதவை திறந்து பார்த்தபோது, அங்கு சில்பா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


தனது சமூக ஊடக பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஏமாற்றாதே...’ என்ற தலைப்பு கொடுத்து வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அபிஜித் போர்வை ஒன்றை விலக்கி, சில்பா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் படுக்கையில் கிடப்பதை காட்டுகிறார். மற்றொரு வீடியோவில், ‘‘நான் பாட்னாவைச் சேர்ந்த வியாபாரி. சில்பா ஜாரியா என்னுடன் இணைந்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஜித்தேந்திர குமார் என்பவரிடமும் நெருங்கி பழகியுள்ளார்.


ஜித்தேந்திராவிடம் ரூ.12 லட்சத்தை வாங்கிக் கொண்டு சில்பா ஜபல்பூர் வந்துவிட்டார். ஜித்தேந்திரா கூறியபடிதான், நான் சில்பாவை கொலை செய்தேன்” என அந்த வீடியோவில் அபிஜித் கூறியுள்ளார். டெல்லி, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் என அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது.


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இந்திய காவல்துறை பதிவு செய்த 60 லட்சம் குற்றங்களில் 4,28,278 வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைவை. 2021ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ள பெரும்பாலான வழக்குகள் கடத்தல், பாலியல் வல்லுறவு, வீட்டு வன்முறை, வரதட்சணை மரணங்கள், பாலியல் தாக்குதல்கள் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், 107 பெண்கள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகினர். 1,580 பெண்கள் கடத்தப்பட்டனர். 15 சிறுமிகள் விற்கப்பட்டனர். 2,668 பெண்கள் இணைய குற்றங்களில் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.