ஒரு கல்யாணமே கண்ணக் கட்டது இதுல ரெண்டு கல்யாணம் அப்புறம் மூன்று பேரும் ஒரே வீட்டில் வாழ்கின்றனர் என்பதையெல்லாம் கேட்டால் தலை சுத்தத்தானே செய்யும். ஆமாம் உண்மையில்தான் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. சட்டப்பூர்வமாக இது செல்லத்தக்கதல்ல. பேன்ஸி, பேன்டஸிக்காக செய்யும் இதுபோன்ற காரியங்கள் பின்பற்றத்தக்கதும் அல்ல என்பதை தெரிவித்துக் கொண்டே இச்செய்தியை கொடுக்கிறோம்.


சம்பவம் நடந்தது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம். அங்குள்ள டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் என்ற இளைஞர். இவர் டிக்டாக் வீடியோக்களால் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இவருக்கும் விமலா என்ற பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன் நட்பு ஏற்பட்டுள்ளது. பரஸ்பரம் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்ற நட்பு நாட்கள் செல்லச்செல்ல காதலாக மாறியது. ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வீடியோக்களை உருவாக்கி வெளியிட்டனர். முன்பை விட இருவரும் பிரபலமாகினர். விமலா, கல்யாண் திருமணமும் செய்து கொண்டனர். அதன் பின்னர் தான் அந்த விபரீதமும் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர் விமலா வழக்கத்திற்கு மாறாக சோகமாக மாற கல்யாண் ஏன் என்று தெரியாமல் புலம்பியுள்ளார் பின்னர் விமலாவிடம் நச்சரித்துக் கேட்க தன்னை நித்யஸ்ரீ என்ற பெண் சந்தித்ததாகக் கூறியுள்ளார். கல்யாணுக்கு விவரம் புரிந்துள்ளது. ஏனென்றால் விமாலவை சந்திப்பதற்கு முன்னர் நித்யஸ்ரீயை விரும்பியுள்ளார் கல்யாண். இதை விமலாவிடம் சொல்லிப் புலம்பிய நித்யஸ்ரீ தன்னை கல்யாணுடன் சேர்த்து வைக்குமாறு கெஞ்சி மன்றாடியுள்ளார். விமலா சரி நான் உனக்கு என் கணவரை திருமணம் செய்துவைக்கிறேன் ஆனால் நாம் மூவரும் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று கூறினார். இதற்கு ஒப்புக்கொள்ள கல்யாண், நித்யஸ்ரீ திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்தின்போது மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானது. ஆனால் இந்த மூவரும் இப்போது எங்கிருக்கின்றனர். என்ன செய்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை. 


டிக்டாக் பிரபலங்களும் கேலி கூத்தும்:


தமிழகத்திலும் ஜிபி முத்து, சூர்யா என நிறைய டிக்டாக் பிரபலங்கள் உண்டு. சூர்யா என்ற பெண்ணின் டிக்டாக் வீடியோக்கள் எல்லை தாண்டிச் சென்றது. அவரது ஆபாசப் பேச்சுகளால் அவருக்கு பெரிய அளவில் ஃபாலோவர்ஸும் சேர்ந்தனர். இதேபோல் தான் ஜிபி முத்துவும் பிரபலமானார். செத்த மூதி என்று அவர் பேசுவதைப் பார்த்து நிறைய பேர் அப்படி பேசவும் தொடங்கினர். இவர்களை போன்ற சில்லறை பிரபலங்கள் சேர்ந்து அவுட்டிங் செல்வதும் டேட்டிங் செல்வதும் லைவில் வந்து கசமுசா செய்வதுமாக சமூக வலைதளப் பக்கங்கள் ஏ சென்சார் தேவைப்படும் பக்கங்களாக மாறிய நிலையில் தான் காவல்துறை தலையிட்டது.


டிக்டாக் அரசால் தடை செய்யப்பட்டு விட்டதால் இன்ஸ்டாகிராமில் இழிவாகப் பேசிவந்த சூர்யாவுக்கு காவல்துறை கிடுக்கிப்பிடி போட்டது. இப்போது ஜிபி முத்துவும் சமூக வலைதள பக்கங்களில் எட்டிப் பார்ப்பதில்லை. அளவோடு இருந்தால் எதுவும் நலமாக இருக்கும் என்பதற்கு இவர்கள் எல்லோரும் சாட்சி தான்.