Thiruvananthapuram Mayor: திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயர் என கூறப்படும் ஸ்ரீலேகா யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
கேரளாவில் தடம்பதித்த பாஜக:
இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கம் செலுத்தி வரும் கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெற்றுள்ள வெற்றி பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது. மாநிலத்தின் தலைநகரில் கடந்த 45 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரிகளின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த தருணத்தை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றும் வகையில், கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கடும் போட்டிக்கு மத்தியில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பாஜகவின் முதல் மேயர்..
2020 ஆம் ஆண்டு காவல்துறை இயக்குநர் ஜெனரலாக (டிஜிபி) ஓய்வு பெற்ற ஆர். ஸ்ரீலேகா, சாஸ்தாமங்கலம் பிரிவில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு பாஜகவின் எழுச்சியின் மிக முக்கியமான முகங்களில் ஒருவராக கருதப்படுகிறார். இதனால் 64 வயதான பாஜகவின் மேயர் தேர்வாக இருக்கக் கூடும் என்ற தகவல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி நடந்தால் கேரள மாநில தலைநகரில் பாஜகவின் முதல் மேயர் என்ற அந்தஸ்தை பெறுவார். இதுகுறித்து கேட்டதற்கு, அந்த முடிவு கட்சித் தலைமையிடம் உள்ளது என்று ஸ்ரீலேகா பதிலளித்துள்ளார்.
யார் இந்த ஸ்ரீலேகா?
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீலேகா, 1987 ஜனவரியில் கேரளாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியானார். 30 ஆண்டுகளுக்கும் அதிகமான தனது காவல்துறை வாழ்க்கையில், பல மாவட்டங்களில் காவல் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கினார் மற்றும் சிபிஐ, கேரள குற்றப்பிரிவு, விஜிலென்ஸ், தீயணைப்புப் படை, மோட்டார் வாகனத் துறை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்ற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில், அவர் காவல்துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார், கேரளாவில் இந்தப் பதவியைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். சிபிஐயில் பணியாற்றிய காலத்தில், அவரது அச்சமற்ற சோதனைகள் மற்றும் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக 'ரெய்டு ஸ்ரீலேகா' என்ற பட்டப்பெயரையும் பெற்று இருந்தார். 33 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் இருந்த அவர், டிசம்பர் 2020 இல் ஓய்வு பெற்றார்.
அரசியலில் ஸ்ரீலேகா...
பிரதமர் நரேந்திர மோடியால் ஈர்க்கப்பட்டதாகக் கூறி, அக்டோபர் 2024 இல் பாஜகவில் இணைந்தார். ஸ்ரீலேகா தனது காவல் பணியின் போது தனக்கு எந்த அரசியல் தொடர்புகளும் இல்லை என்றும், அரசியல் சார்பு இல்லாமல் பணியாற்றினேன் என்றும் கூறியுள்ளார். மாநிலத் தலைநகரில் பாஜக தனது முன்னோடியில்லாத வளர்ச்சியைக் கொண்டாடும் வேளையில், கேரள குடிமை அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், திருவனந்தபுரம் மாநகராட்சியைத் தலைமை தாங்க ஸ்ரீலேகா தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது குறித்து அறிய பலரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.