வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் நடைபெற்றது.


INDIA கூட்டணி கட்சிகளுக்கிடையே சலசலப்பு:


ஐந்து மாநில தேர்தல் காரணமாக INDIA கூட்டணியின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், INDIA கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. ஏன் என்றால், INDIA கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தொகுதிகள் ஒதுக்கவில்லை. தெலங்கானாவை தவிர்த்து 4 மாநிலங்களிலும் தனித்தே களம் கண்டது. 


குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்த்தபோதிலும், அக்கட்சிக்கு காங்கிரஸ் ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், வெளிப்படையாகவே தனது அதிருப்தியை பதிவு செய்திருந்தார்.


இப்படிப்பட்ட சூழலில், டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், கூட்டணி தலைவர்களிடையே நிலவி வந்த மன மனக்கசப்பை போக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே களத்தில் இறங்கினார். அவர் எடுத்த முயற்சியின் காரணமாக பிரச்னை தீர்க்கப்பட்டது.


தேசிய அரசியலை அதிரவிட்ட மேற்குவங்க முதலமைச்சர் மம்தா:


இச்சூழலில், டெல்லியில் நாளை INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா டெல்லி சென்றுள்ளார்.


இந்த நிலையில், மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் - காங்கிரஸ் - திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக மம்தா தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்கத்தில் 34 ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர் மம்தா. இடதுசாரிகளும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பரம எதிரிகளாக கருதப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், மம்தாவின் பேச்சு மேற்குவங்க அரசியலையே திருப்பிப்போட்டுள்ளது.


கூட்டணி குறித்து விரிவாக பேசிய மம்தா, "2024 தேர்தலுக்கு பிறகு, அனைவரும் சேர்ந்து பிரதமரை தேர்வு செய்வோம்" என்றார். இந்த கூட்டணியில் ராகுல் காந்தி, எந்த விதமான பங்கை ஆற்றப்போகிறார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மம்தா, "வேறொரு அரசியல் கட்சி பற்றி கருத்து கூற விரும்பவில்லை. எனக்கு யாருடனும் தனிப்பட்ட பிரச்னைகள் இல்லை. பாஜகவுடன் கருத்தியல் பிரச்னை உள்ளது. ஆனால், இந்தியா கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்ய தயார்" என்றார்.