மேற்கு வங்க முதல்வருடன் பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கலந்துரையாடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   


2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த மாற்றுக் கட்சியை உருவாக்கும் முயற்சியாக மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறார். அதன்ஒரு பகுதியாக,  இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு விரைந்த அவர், தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்நிலையில், சிவில் சமூகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திரையுலகினரைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக மற்றும் கலாச்சார அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சமீபத்திய  அரசியல் முரண்களை பம்தாவிடம் கலந்துரையாடினர்.     






இந்த நிகழ்ச்சியில், பிரபல பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கலந்து கொண்டார். சமூகத்தில் நிகழும் அவலங்களையும், ஆங்காங்கே நடக்கும் அரசு வன்முறைகளையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி குறிப்பிட்டு வருபவர் இவர். 


நேற்றைய நிகழ்ச்சி அவையில், நாட்டில் சட்டவிரோதச் செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் - (UAPA) தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். "வணங்க மறுத்த பிறகும், கடவுள் போல் செயல்படும் அரசு நிர்வாகம் UAPA வழக்குகளை தட்சணையாக ள்ளிக் கொடுத்து வருகிறது" என்று தெரிவித்தார். பாஸ்கர் இந்த கருத்தை பதிவு செய்தவுடன், அரங்கமே ஒரு நிமிடம் தன்னிலையை மறந்தது. 


            


மேலும், தனது ஆதங்கத்தை வெளிபடுத்திய அவர்," கதைகளுக்கு பாரம்பரியம் கொண்ட ஒரு நாட்டில், தற்போது கதை சொல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்ப்புக் குரலை பதிவு செய்ய கலைஞன் தான் வாழ்வாதாரத்தை பணயம் வைக்க வேண்டியுள்ளது.  முனாவர் ஃபாரூக்கி, ஆதிதி மிட்டல் போன்ற நகைச்சுவை கலைஞர்களின் படைப்பாற்றல் வீணடிக்கப்பட்டு வருகிறது. வலது சாரி சிந்தனையாளர்களால் பல மேடைகள் வெறுமையாகிவிட்டன. அடையாளம் தெரியாத, முகம் தெரியாத கும்பல் வன்முறையை சாதாராண வெகுஜன மக்களும் சந்தித்து வருகின்றனர். காவல் துறையும், அரசு நிர்வாகமும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதன் மூலம், கும்பல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன" என்று தெரிவித்தார். 


ஸ்வரா பாஸ்கரின் மனக்குமுறல்களைக் கேட்டு வியப்படைந்த மம்தா பேனர்ஜி, " எதற்கும் அஞ்சாத, அநீதியை கண்டு பொங்கி எழும் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது" என்று வினவினார்.


இதற்கு, அரங்கத்தில் இருந்த அனைவரும் பலத்த கரகோஷங்களை அளித்தனர். அந்த, வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.