Watch Video: இருக்கையில் அமர்ந்திருந்து எழுந்தபோது மடியில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில், தோட்டா பாய்ந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
திடீரென பாய்ந்த தோட்டா
பஞ்சாப் மாநிலம் ஃபிரோசெபுர் பகுதியில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன. தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை மடியில் வைத்திருந்த ஒருவர், சோஃபாவில் அமர்ந்திருந்த நிலையில் வெளியே செல்வதற்காக எழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்த துப்பாக்கியில் இருந்து தோட்டா பாய்ந்ததில், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலியான வெளிநாடு வாழ் இந்தியரான ஹர்பிந்தர் சிங் எனப்படும் சோனு, தானி சச்சா சிங் எனும் கிராமத்தில் அண்மையில் தான் குடியேறியுள்ளார்.
நடந்தது என்ன? - சிசிடிவி காட்சிகள்
வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின்படி, “சம்பவம் நடந்தபோது ஹர்பிந்தர் தனது உறவினருடன் சேர்ந்து சோஃபாவில் அமர்ந்திருந்தார். திடீரென அங்கிருந்து எழுகையில், மடியில் இருந்த துப்பாக்கி வெடித்து, அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்தது. அவர் வயிற்றில் காயமடைந்ததை உணர்ந்து அழுத்தி பிடிக்க, துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அருகிலிருந்த உறவினர்கள் சோனுவிற்கு உதவ ஓடிவந்தனர். அந்த அறையில் இருந்து அவரை வெளியேற்றினர். அருகிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்ட நிலையில், கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
ஹர்பிந்தர் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடும்பத்தினரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்து திருமணம் செய்து கொண்ட ஹர்பிந்தர், இரண்டு வயது மகளின் தந்தை. அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, அவரது கிராமத்தைச் சேர்ந்த பலர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் (AAP) அஞ்சலி செலுத்தினர்.
