அண்மையில் வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ தற்போது பெரும் அளவில் வைரலாகி வருகிறது.காரணம் ஒரு பெயர் அடையாளம் தெரியாத நபர் நூலிழையில் சிறுத்தையிடம் இருந்து உயிர் பிழைத்ததுதான்.  






வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் காசிரங்கா தேசியப் பூங்காவில் ஒரு சிறுத்தை, தனது சைக்கிளில் இருந்து ஒரு மனிதனைத் பின்னாளில் இருந்து திடீரெனத் தாக்குகிறது. வீடியோவில், சிறுத்தை சைக்கிள் ஓட்டுபவர் மீது பாய்ந்ததும், அந்த வேகத்தில் அவர் சைக்கிளில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு விழுகிறார்.பாய்ந்த சிறுத்தையும் காணாமல் போனது. "அந்த சைக்கிள் ஓட்டுனரால் நடந்ததை நம்ப முடியவில்லை...பிழைத்ததுஅவரது அதிர்ஷ்டம்!" என்று கஸ்வான் தனது வீடியோவில் பதிவிட்டுள்ளார்.


 


முன்னதாக,


கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சிறுத்தைப்புலிகள் இடம் மாற்றப்படுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த இனமாக அறிவிக்கப்பட்ட சிறுத்தைப்புலி இனம் தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள குனோ தேசியப் பூங்காவுக்கு எடுத்து வரப்படவுள்ளன. சிறுத்தைப்புலி போன்ற பெரிய விலங்கினத்தை ஒரு கண்டத்தில் இருந்து மற்றொரு கண்டத்திற்கு எடுத்து வரப்படுவது இதுவே முதல்முறை. 


மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் பேசியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், `சிறுத்தைப்புலிகளை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிவடைந்துள்ளன. மேலும், தென்னாப்பிரிக்காவுடனான ஒப்பந்தமும் முடிந்துள்ளது. வெளியுறவுத்துறையின் இறுதிகட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.. தென்னாப்பிரிக்காவில் நமது நாட்டின் குழு ஒன்று தற்போது பணியாற்றி வருகிறது’ எனக் கூறியுள்ளார்.


தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தக் குழு இந்தியா வந்தடைகிறது. அதன்பின், குனோ தேசியப் பூங்காவில் சிறுத்தைப்புலிகளின் இடம் மாற்றத்திற்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் இந்தக் குழு திட்டமிட்டுள்ளது. 


இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், இந்தியக் கானுயிர் நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து பணியாற்றி வருகின்றன. 


கடந்த 1947ஆம் ஆண்டு, சத்திஸ்கர் மாநிலத்தின் கோரியா பகுதியைச் சேர்ந்த மகாராஜா பிரதாப் சிங் தியோ இந்தியாவில் இருந்த கடைசி மூன்று ஆசிய சிறுத்தைப்புலிகளை வேட்டையாடினார். இதனைத் தொடர்ந்து, 1952ஆம் ஆண்டு இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் அழிந்த இனமாக அறிவிக்கப்பட்டது.


வேட்டை, வாழ்விட அழிப்பு முதலான காரணங்களுக்காக சிறுத்தைப்புலி இனம் அழிந்த பிறகு, அவற்றை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்காக பல முறை திட்டமிடப்பட்டது.


பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு வந்தாலும், தற்போது சிறுத்தைப்புலிகளைக் கொண்டு வரும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. எனினும், கடந்த 2020ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. கடந்த 2010ஆம் ஆண்டு இந்தியக் கானுயிர் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ராஜஸ்தானில் உள்ள முகுந்தரா மலைகள் புலிகள் காப்பகம், ஹேர்கர் கானுயிர் சரணாலயம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் கானுயிர் சரணாலயம், குனோ தேசியப் பூங்கா, மாதவ் தேசியப் பூங்கால், நௌராதேஹி கானுயிர் பூங்கா ஆகியவை சிறுத்தைப்புலிகள் வாழ்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அவை தற்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றுள் குனோ தேசியப் பூங்கா தயாராக இருப்பதாக கூறப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


தற்போது எடுத்து வரப்படும் சிறுத்தைப்புலிகள் இந்தியச் சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதன் அடிப்படையில், அடுத்தடுத்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு 35 முதல் 40 சிறுத்தைப்புலிகள் வரை படிப்படியாக கொண்டு வரப்படும் என இந்தியக் கானுயிர் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.