மத்தியப் பிரதேசத்தில் மருத்துவமனை ஒன்றில் நாய் படுத்து தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



மத்தியபிரதேசம் மாநிலம் ரத்லமில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் படுக்கையில் தெரு நாய் ஒன்று ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறது. இதனை வீடியோ எடுத்து இணையத்தில் சில பதிவிட , அந்த வீடியோ வைரலானது. இதனை கண்ட எதிர்கட்சியான காங்கிரஸ் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.. இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா ஒரு ட்வீட்டில், பாஜக ஆட்சியின் கீழ் மாநிலத்தில் நாய்கள் நன்றாக தூங்குகின்றன, அதே நேரத்தில் நோயாளிகள் மருத்துவமனைகளில் படுக்கைகளைப் பெற முடியவில்லை. என குறிப்பிட்ட அவர் “ இது மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவனையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ . ”கவலைக்குரிய சுகாதார அமைப்பு” என மேற்க்கோள் காட்டியுள்ளார்.







முன்னதாக உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தின் மருத்துவமனை ஒன்றில் , பெண் ஒருவர் அவசர நிலையில் ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்டார். உடனடியாக பரிசோதிக்க வேண்டிய நிலை . மின்சாரம் இல்லாததால் மருத்துவர்கள் மொபைல்போனில் இருக்கும் டார்ச் லைட்டை பயன்படுத்தி , அந்த பெண்ணை பரிசோதித்துள்ளனர். மருத்துவமனையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட தற்காலிக வசதிகள் எதுவும் இல்லை என தெரிகிறது. மருத்துவமனையில் காத்திருந்த நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மொபைல் டார்ச் விளக்குகளின் கீழ் சிகிச்சை பெற்றதாக செய்திகள் வெளியாகின.


இந்த சம்பவம் குறித்து மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் தலைமைப் பொறுப்பாளருமான டாக்டர் ஆர்.டி.ராம் "மருத்துவமனையில் நாங்கள் பேக் அப்பிற்கு ஜெனரேட்டர்களை எப்போதுமே வைத்திருக்கிறோம் . ஆனால் அதற்கான பேட்டரிகளை நாங்கள் போட்டு வைத்திருப்பதில்லை.ஜெனரேட்டருக்கான பேட்டரிகளைப் பெறுவதில்  15-20 நிமிடங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால்தான் மொபைல் வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டியதாயிற்று"  என விளக்கம் அளித்துள்ளார். பேட்டரியை எப்போதுமே சரிபார்ப்பதில்லையா ? ஏன் அவசரகால ஜெனரேட்டர்களில் பேட்டரிகள் பொருத்தப்படவில்லை என கேட்டதற்கு பதிலளித்த மருத்துவர் “ இந்த பகுதியில் பேட்டரிகள் திருடுபோகும் என்ற அச்சம் எப்போதும் உள்ளது. அதனால்தான் பேட்டரிகளை அகற்றி வைத்துவிடுகின்றனர் “ என்றார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவியதும் குறிப்பிடத்தக்கது.