பாபா சாஹேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது முன்பு வழங்கப்படாமல் இருந்தது, மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை சுமார் 10 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது போன்றவை கவலை அளித்த விஷயங்கள் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.


'இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி'


வெளிநாட்டு மண்ணில் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவது குறித்தும் அவர் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். மும்பையில் உள்ள எல்பின்ஸ்டன் தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளி, ஜூனியர் கல்லூரியில் இன்று சம்விதான் மந்திர் எனப்படும் அரசியல் சாசன கோவில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய ஜெகதீப் தன்கர், அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது என்றும் அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.  


அரசியலமைப்பை புரிந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பின் கீழ் நாம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், நமது அரசியலமைப்பு அடிப்படை கடமைகளையும் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.


இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி எனவும் சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை  எனவும் அவர் குறிப்பிட்டார்.


இடஒதுக்கீடு குறித்து குடியரசுத் துணைத் தலைவர் பேசியது என்ன?


பாபா சாஹேப் அம்பேத்கருக்கு 1990 மார்ச் 31 அன்று பாரத ரத்னா வழங்கப்பட்டது எனவும் இந்த கௌரவம் ஏன் முன்னரே வழங்கப்படவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலமான 21 மாத அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் தகவல்களைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


ஒரு குறிப்பிட்ட நாளை ஒருபோதும் மறக்காமல் அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 1975 ஜூன் 25 ஒரு கருப்பு நாள் என்று அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் இருண்ட அத்தியாயம் அது எனவும் நமது ஜனநாயகத்தின் இருண்ட காலம் அது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.


அவை தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும் என அவர் கூறினார். இதைக் கருத்தில் கொண்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.


ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படுகிறது என அவர் சுட்டிக்காட்டினார். அந்த 21 மாதங்களில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம் என குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.