கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற இடத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்களான ஈழவர், புலையர் ஆகியோர் நடக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தெருக்களில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்களில் உயர்சாதியாக கருதப்படுவோர் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஈழவர், தீயர், புலையர் ஆகியோர் நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.


வைக்கத்தில் அப்படி என்னதான் நடந்தது?


இப்பிரச்சனைக்காக 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி காலை 6 மணிக்கு போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்தனர். இதுதான் வைக்கம் போராட்டத்தின் முதல் போராட்டமாகும். திட்டமிட்டபடி, மார்ச் முப்பதாம் தேதி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் அந்த சாலைக்கு அருகில் திரண்டனர். இதையடுத்து காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது.


இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். எனவே தலைவர்கள் இல்லாமல் போராட்டம் தத்தளித்தது. 


கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு முன்னோடி:


கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில், வரதராஜுலு நாயுடு, எஸ். ஸ்ரீநிவாஸ அய்யங்கார் போன்ற வேறு பல காங்கிரஸ் தலைவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வைக்கம் சென்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அப்போது இருந்த பெரியார் வைக்கம் சென்று, அந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். அங்கு பல நாட்கள் அங்கு தங்கியிருந்து போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு பெரியார் அழைத்துச் சென்று, வைக்கம் வீரர் என்ற பட்டப் பெயரையும் பெற்றார்.


இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்வது வைக்கம் போராட்டம். ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவ உரிமையைப் பெறுவதில் இந்த போராட்டம் முதற்படியாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.


ஒன்றறை ஆண்டுகளுக்கும் மேல் நடந்த வைக்கம் போராட்டம், 1925 நவம்பர் 23 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பெரியார் தலைமையில் வைக்கத்தில் வெற்றி விழாவும் நடைபெற்றது.


தமிழ்நாடு அரசு அறிவிப்பு:


இப்படி, இந்திய சமூக நீதி வரலாற்றில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. 


ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. 


வைக்கம் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், செப்டம்பர் 17 ஆம் தேதி சமூக நீதி நாள் அன்று தமிழ்நாடு அரசால் வைக்கம் விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளது.