டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அவரின் காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கி வருகிறது.


6 பாகங்களாக வெட்டிக்கொலை:


இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் யாதவ். இவர், அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.


இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இதற்கு பிறகும் கூட, ஆராதனா பிரின்ஸூடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இச்சூழலில், யாதவ் தனது பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதி, ஆராதனாவை பிரின்ஸ் தனது பைக்கில் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


தலை துண்டிப்பு


அவர்கள் அங்கு சென்றதும், சர்வேஷின் உதவியுடன் கரும்பு தோட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆராதனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், இருவரும் அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசியுள்ளனர்.


சிறிது தொலைவில் உள்ள குளத்தில் வெட்டப்பட்ட தலையை வீசினர். நவம்பர் 15 ஆம் தேதி, உள்ளூர்வாசிகள் சிலர் பஸ்சிமி கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள கிணற்றில் அரை நிர்வாண கோலத்தில் சடலம் ஒன்றை கண்டெடுத்தனர். இதற்கு பிறகுதான், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


 






காவல்துறை விசாரணையை தொடர்ந்து பிரின்ஸ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை அவரிடம் இருந்து கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


துப்பாக்கிச்சூடு:


பின்னர், வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுப்பதற்காக பிரின்ஸை அழைத்து கொண்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு காவல்துறையை நோக்கி பிரின்ஸ் சுட்டுள்ளார்.


காவல்துறையும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். அதில், பிரின்ஸ் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. குற்ற செயலில் யாதவுக்கு உதவிய சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா என அனைவரும் தலைமறைவாக உள்ளனர். ஏற்கனவே, டெல்லி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இது மேலும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.