உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவரின் மகளுடன் 47 வயதான தலைவர் ஒருவர் மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


உத்தர பிரதேசம் மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் வசித்து வருபவர் 47 வயதான ஆஷிஷ் சுக்லா. இவர் அந்த பகுதியில் பாஜக தலைவராக இருந்து வருகிறார். சுக்லாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 21 வயது மகனும், ஏழு வயதில் மகளும் இருந்துள்ளனர். 


 அதேபகுதியில் வசித்து வரும் சமாஜ்வாதி கட்சி தலைவரின் 26 வயது பெண்ணுக்கும், சுக்லாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. 


இந்தநிலையில், அந்த பெண்ணிற்கு கடந்த ஜனவரி 13, தேதி நிச்சயதார்த்த ஏற்பாடுகளை அப்பெண்ணின் குடும்பத்தினர் செய்துள்ளனர். இதனால், திருமண நிச்சயித்த நாளில் சுக்லாவும், அந்த பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். 


இதனால் ஆத்திரமடைந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர், சுக்லா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், 47 வயதான பாஜக நகர பொதுச்செயலாளர் ஆஷிஷ் சுக்லா என்ற ராஜு சுக்லா எங்கள் பகுதியில் வசித்து வருகிறார். ஜனவரி 13 ஆம் தேதி, ஆஷிஷ் தனது 26 வயது மகளுடன் திருமணத்தை காரணம் காட்டி ஓடிவிட்டார். பாஜக தலைவர் ஆஷிஷ் இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.” என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர். 


இந்த சம்பவம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியின் ஹர்தோய் மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் கங்கேஷ் பதக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பாஜக கட்சியின் நகரப் பொதுச் செயலாளராக ஆஷிஷ் சுக்லா இருந்தார். கட்சியின் கொள்கைக்கு எதிரான வேலையால் தற்போது அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது முதன்மை உறுப்பினர் பதவியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுக்லாவுக்கும் கட்சிக்கும் இப்போது எந்த சம்பந்தமும் இல்லை. ஆஷிஷ் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் உள்ளது.” என்று தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் யாதவ் கூறுகையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சியில் மகள்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமாஜ்வாதியின் மாவட்ட தலைவர் ஜிதேந்திர வர்மா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கட்சி தொண்டர்களுக்கு நீதி கிடைக்க ஜிதேந்திர வர்மா தெருவில் இறங்குவார்” என்றார்